சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பக வளாகத்தில் கட்டப்பட்டுள்ள 6 மாடிகளை கொண்ட புதிய அடுக்குமாடி கட்டிடம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது.

மருத்துவத் துறையில் புதிய மைல்கல் ! பொதுப்பணித் துறையின் மூலம் கீழ்ப்பாக்கம் மனநல காப்பக வளாகத்தில் மனநலம் மற்றும் நரம்பியல் நிலையத்திற்கு ரூ.35 கோடி செலவில் தரைத்தளத்துடன் 6 தளங்கள் கொண்ட புதிய கட்டடம் ! விரைவில் பயன்பாட்டிற்கு வரும் ! என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.

தமிழக அரசின் பொதுப்பணித் துறையின் மூலம் சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பக வளாகத்தில் மனநலம் மற்றும் நரம்பியல் நிலையத்திற்கு ரூ. 35 கோடி செலவில் தரை தளத்துடன் 6 தளங்கள் கொண்ட புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டடம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற வருபவர்களுக்குச் சிறந்த மருத்துவச் சேவையை வழங்குதற்கான நவீன உபகரணங்களுடன் கூடிய புதிய மனநல மற்றும் நரம்பியல் நிலையத்திற்கான ஒப்புயர்வு மையக் கட்டடம் ரூபாய் 35 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் என மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பேரவையில் அறிவித்தார். அந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் தேதி (30.3.2023) அன்று ரூபாய் 35 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார். அதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி (24.8.2023) முதல் இக்கட்டடத்திற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

புதிய மருத்துவமனைக் கட்டடம் மொத்தம் 88 ஆயிரத்து 39 சதுர அடி பரப்பளவில் தரைதளம் மற்றும் 6 தளங்களுடன் 239 படுக்கை வசதிகளுடன் உலகத் தரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தரைத் தளத்தில் கதிரியக்க நோய் கண்டறிதல் பிரிவு, மனநலப் புறநோயாளிகள் பிரிவு, நரம்பியல் புறநோயாளிகள் பிரிவு அமைக்கப்பட்டுள்ளன. முதல் மற்றும் இரண்டாம் தளங்களில் மூப்பியல் பிரிவு, நரம்பியல் புறநோயாளிகள் பிரிவு, அறிவாற்றல் பழகுமுறை மற்றும் குழந்தைகள் ஆலோசனை அறை போன்ற வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. மூன்றாம் தளம் உள்நோயாளிகள் பிரிவு, புலன் உணர்வு அறை. அடிமைத்தன்மை மீட்பு ஆலோசனை அறை, போன்ற வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. நான்காம் மற்றும் ஐந்தாம் தளங்கள் நரம்பியல் பிரிவு மற்றும் குழந்தைகள் பிரிவு போன்ற வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன.

ஆறாம் தளத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் இரண்டு அறுவை சிகிச்சை அரங்குகள் போன்ற வசதிகளும் இடம்பெறும். இக்கட்டடத்தின் அனைத்துத் தளங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பிடம், பொதுக் கழிப்பிடம், இரண்டு மின் தூக்கிகள், இரண்டு படிக்கட்டுகள், சாய்வு தளம், மருத்துவ-திரவ ஆக்ஸிஜன் இணைப்புகள், தீயணைப்பு உபகரணங்கள் போன்ற அனைத்து வசதிகளும் இடம்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டின் கட்டமைப்புகளை மேம்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவுப்படி பொதுப்பணித்துறையின் மூலம் தமிழ்நாட்டில் கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் 4 ஆயிரத்து 821 கோடியே 55 இலட்சம் ரூபாய்ச் செலவில் 941 மருத்துவ துறைச் சார்ந்த புதிய கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இவை மட்டுமல்லாமல் மருத்துவத் துறையில் மேலும் பல்வேறு புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இது மருத்துவத் துறையில் புதிய மைல்கல் என்பது குறிப்பிடத்தக்கது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.