சென்னை

ஜெ. யின் மரணம் மர்ம நாவலைப்போல் பல மர்ம முடிச்சுகளை கொண்டிருப்பதால் மத்திய மாநில அரசுகள் மர்மமுடிச்சுகளை அவிழ்க்கவேண்டும் என டி.ராஜேந்தர் கோரிக்கை விடுத்துள்ளார். லட்சிய திமுகவின் நிறுவனத் தலைவர் விஜய டி ராஜேந்தர்
செய்தியாளர்களிடம் பேசியபோது இதனைத் தெரிவித்தார். தன்னை மிரட்டி ராஜினாமா கடிதம் வாங்கியதாக கூறிய ஓ.பன்னீர்ச்செல்வம், போலீஸ் கமிஷனரிடம் புகார் தெரிவிக்காமல், ஆளுனரிடம் சென்றதேன் என  கேள்வி எழுப்பினார்.

மேலும் அவர், “செப்டம்பர் 22 ஆம் தேதியன்று அம்மா அவர்கள் உடல்நலகுறைவு காரணமாக அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார்கள். செப்டம்பர் 27 ஆம் நாளன்று காவிரி தீர்ப்பாயம் தொடர்பான விவாதக் கூட்டம் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் நடைபெற்றதாகவும், அதில் அன்றைய சிறப்பு தலைமை செயலாளரான திருமதி ஷீலா பாலகிருஷ்ணன், தலைமை செயலாளர் திரு ராம்மோகன் ராவ், முதலமைச்சரின் செயலாளர்  வெங்கடரமணன் மற்றும் ராமலிங்கம் ஐ ஏ எஸ் ஆகியோர் அதில் கலந்துகொண்டதாகவும், இதில் அம்மா அவர்கள் ஒரு முக்கிய முடிவினை எடுத்திருக்கிறார்கள் என்றும் அரசு சார்பில் செய்திக்குறிப்பு வெளியானது.  ஒரு கூட்டம் நடந்தால் யார் கலந்துகொண்டார்களோ அவர்களது கையெழுத்து இருக்கும். அப்படியென்றால் முதல்வர் அம்மா அவர்களின் கையெழுத்து அதில் இடம்பெற்றிருக்கும். அதை இப்போது காட்டுங்க
ள். எங்கே அந்த குறிப்பு?” என்றார்.
அக்டோபர் 2 ம் தேதி அப்பல்லோவில் சிகிச்சை பெற்றுவந்த முதலமைச்சரை சந்திக்க சென்ற ஆளுனர் முதலமைச்சரை சந்திக்க முடியவில்லை என்றார். மீண்டும் ஆளுனர் அக்டோபர் 22 ம் தேதி முதலமைச்சரைப் பார்க்க அப்பல்லோ செல்கிறார். அப்போது முதலமைச்சர் முகத்தில் மாஸ்க் அணிந்திருந்தாராம். வாயால் பேச முடியவில்லை என்றாலும் சைகைகளால் பேசியதாக சொன்னார்கள்.  நான் கேட்கிறேன், முதல்வர் சைகை செய்தார்கள் என்றால், அவர்கள் இடது கையால் சைகை செய்தார்களா? அல்லது வலது கையால் சைகை செய்தார்களா?  ஆனால் மறுநாள் மேதகு ஆளுநர் இவர்கள் சொன்னதை மறுத்தார். ஏனிந்த முரண்பாடு? அந்த சமயத்தில் ஆக்டிங் சி எம்மாக இருந்தவர் பன்னீர் செல்வம் தானே? அப்போ ஆக்க்ஷன் எடுக்காமல் இப்போது எதற்கு ஆக்டிங் செய்கிறார்?” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், “சசிகலாவால் ஒரு மணி நேரம் கூட முதல்வராக முடியாது என்று கோவையில் நடந்த கூட்டத்தில் தெரிவித்தேன். இது என்னுடைய ஜோதிட  கணிப்பு அல்ல. மக்கள் யாவரும் சசிகலா முதல்வராவதை ஒருபோதும் ஆதரிக்கவில்லை. நான் ஆன்மீகவாதியாக இருந்து இதனை  அன்றே சொன்னேன்” என்றார்.

இதைத்தொடர்ந்து செயதியாளர்கள், ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கருதுகிறீர்களா? என்று கேட்டபோது, ‘ஜெயலலிதாவின் மரணம் மர்ம நாவல் போல் பல மர்ம முடிச்சுகள் இருக்கன்றன. இதனை மாநில அரசும் , மத்திய அரசும் இணைந்து பணியாற்றி, இந்த மர்ம முடிச்சுகளை அவிழ்க்கவேண்டும். செப்டம்பர் 22 முதல் பிப்ரவரி 5 ஆம் தேதிவரையிலான கால கட்டத்தில் என்ன நடந்தது என்பது குறித்து விரிவான சி பி ஐ விசாரணை தேவை. இது குறித்து மத்திய அரசு இனியும் காலம் தாமதிக்காமல் விசாரிக்கவேண்டும்.
ஓ பிஎஸ்ஸைப் பார்த்து நான் கேட்பது ஒன்றே ஒன்றுதான், இப்போது நீங்கள் கேட்கும் நீதி விசாரணையை ஏன் பதவியில் இருந்தபோது கேட்கவில்லை? இதைத்தான் நான் இப்போதும் கேட்கிறேன்” என்றார்.
ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து கேட்ட போது,  “ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தன்னுடைய ஆட்சிக்காலத்தில் அனுமதித்த மு க ஸ்டாலின். இன்று அவர் இத்திட்டத்தை எதிர்க்கிறார். முக ஸ்டாலினின் இந்த நிலைப்பாட்டையும், ஹைட்ரோ கார்பன் திட்டம் என்பது மீத்தேன் திட்டத்தின் மறு வடிவம் என்பதையும் பா மக வின் அன்புமணி ராமதாஸ் தெளிவுப்படுத்தியிருக்கிறார். அவர் கூறியதை நான் வரவேற்கிறேன்”

இவ்வாறு டி.ராஜேந்தர் கூறினார்.