தமிழ்த் திரையுலகின் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் விவேக். ஏப்ரல் 16 காலை திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு மருத்துவர்கள் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஏப்ரல் 17 காலை 5 மணியளவில் சிகிச்சை பலனின்றி விவேக் காலமானார். அவருடைய மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் நடிகை நயன்தாரா வெளியிட்ட இரங்கல் செய்தியில், “பல ஆண்டுகளாக அவருடன் பணிபுரிந்த அற்புதமான நினைவுகள் எப்போதும் என்னுடன் இருக்கும். குறிப்பாக ‘விஸ்வாசம்’ படத்தில். மிக விரைவாக நம்மை விட்டுச் சென்று விட்டார். நம்பமுடியவில்லை. வாழ்க்கை எவ்வளவு கணிக்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது என்பதை இது காட்டுகிறது. அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள். இந்த இழப்பைத் தாங்கும் வலிமையை அவர்களுக்கு கடவுள் கொடுக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.