சென்னை: மார்ச் 28, 29 தேதிகளில் நாடு தழுவிய தொழிற்சங்க போராட்டம்  நடைபெறுகிறது. இதில்  தமிழகஅரசு ஊழியர்கள் கலந்துகொள்ளக்கூடாது என தலைமைச் செயலாளர் இறையன்பு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத போக்கு, தனியாமயம் போன்ற மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக தொரிற்சங்கங்கள் 2 நாள் நாடு தழுவிய போராட் டத்தை அறிவித்து உள்ளன. அதன்படி, “தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை கைவிடுதல், மின்சார திருத்தச் சட்டத்தைத் திரும்ப பெறுதல்” “தேசிய பணமாக்கும் கொள்கை மூலம் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குதலை கைவிடுதல்” உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் நடத்தப்படுகிறது.
இந்த போராட்டத்துக்கு எதிர்க்கட்சி ஆட்சி செய்யும் பல மாநிலங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. திமுகவும் ஆதரவு தெரிவித்துள்ளது. ஆனால் தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதையடுத்து,  மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது என  அனைத்து துறை செயலாளர்களுக்கும் தலைமைச் செயலாளர் இறையன்பு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். மேலும்,  பணிக்கு வராதவர்களின் விவரங்களை அனுப்பி வைக்கவும் உத்தரவிட்டுள்ளார்.