புதுச்சேரி:

வர்னர் கிரண்பேடிக்கு எதிராக கடந்த 5 நாட்களாக, கவர்னர் மாளிகை எதிரே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் புதுவை முதல்வர் கிரண்பேடியை, இன்று மாலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

புதுச்சேரி மாநிலத்தில் கிரண்பேடி கவர்னராக நியமனம் செய்யப்பட்டதில் இருந்து, மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட மாநில அரசின் நிர்வாகத்தில் தலையிட்டு வருகிறார். இதன் காரணமாக மாநில அரசுக்கும் கவர்னருக்கு இடையே முட்டல் மோதல் கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வருகிறது. மாநில அரசின் நிர்வாகத்தில் கிரண்பேடி மூக்கை நுழைப்பதால் மக்கள் நலத்திட்டங்கள் முடங்கி உள்ளதாக ஆளும் காங்கிரஸ் அரசு குற்றம் சாட்டி வருகிறது.

இதற்கிடையில், மாநில அரசின் நிதி சம்பந்தமாக பல்வேறு கோரிக்கைகளுக்கு கிரண்பேடி அனுமதி அளிக்க மறுத்து வரும் நிலையில், அதிருப்தி அடைந்த முதல்வர் நாராயண சாமி கடந்த 13ங்நதேதி முதல் திடீரென அரசு நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு தனது அமைச்சரவை சகாக்கள் மற்றும் எம்எல் ஏக்களுடன் கவர்னர் மாளிகை முன்பு தர்ணாவில் குதித்தார். அவருடன் மாநில அமைச்சர்களான   நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன்,  எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி நாராயணன், ஜெயமூர்த்தி, பாலன், விஜய வேணி, தி.மு.க. எம்.எல்.ஏ. சிவா உள்பட ஏராளமானனோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று 4வது நாளாக தொடர்கிறது. இதன் காரணமாக  புதுவை மாநிலமே ஒட்டுமொத்தமாக முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று புதுச்சேரி சென்று முதல்வர் நாராயணசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின்,  கடந்த 13ம் தேதியில் இருந்து இன்றுவரை 5வது நாளாக புதுவை மாநிலத்தின் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அவர்களின் போக்கினை கண்டிக்கக்கூடிய வகையில், இன்னும் சொல்லப்போனால் ஆளுநரை உடனே திரும்பபெற வேண்டுமென வலியுறுத்தி புதுவை மாநிலத்தின் முதல்வர் மாண்புமிகு நாராயணசாமி அவர்களும், அமைச்சர் பெருமக்களும், அனைத்துக் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களும் ஒருங்கிணைந்து இந்த தர்ணா போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.

ஆளுநராக பொறுப்பில் இருக்கும் கிரண் பேடி அவர்கள் மாநிலத்தின் மக்களுக்கு செயல்படுத்த இருக்கக்கூடிய பல்வேறு திட்டங்களை செயல்படுத்த விடாமல், முட்டுக்கட்டை போட்டு தன்னுடைய சர்வாதிகார போக்கை தொடர்ந்து நடத்திக்கொண்டு வருகிறார். குறிப்பாக, மக்களுக்கு நன்மைகளை செய்யும் வகையில் 39 கோரிக்கை கள் அதன் தொடர்பான கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருக்கிறார். பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி அவர்களுக்கும், ஜனநாயக நெறிமுறைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதற்கு இந்த நிகழ்வே எடுத்துக்காட்டாக இருக்கிறது.

ஒருவேளை, புதுவை மாநிலத்தில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டுமென சொன்னால் இப்படி கொள்ளைப் புற வழியாக வரக்கூடாது. தைரியமிருந்தால், தெம்பிருந்தால், திராணி இருந்தால் மக்களை சந்தித்து தேர்தல் மூலமாக வரவேண்டும். அதுமுடியாது என்பதால் ஆளுநர் கிரண்பேடி அவர்களை பயன்படுத்திக் கொண்டு இந்த கேவலமான ஒரு நிலையை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

அதனால் தான் புதுவையில் போலீஸ் ராஜ்யம் நடத்துகிறார்கள். ஏற்கனவே கிரண்பேடி போலீஸ் அதிகாரியாக இருந்திருக்கிறார்கள். அப்போது அவர் திறம்பட பணியாற்றி இருக்கலாம். ஆனால், ஆளுநராக பதவியேற்று மோடியின் கட்டளையை ஏற்று மாநிலத்தின் உரிமைகளை பறித்து ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து வருகிறார் என்பது நாட்டு மக்களுக்கு நன்றாக தெரிந்திருக்கிறது. இந்த புதுவை மாநிலத்தை, கிரண்பேடி அவர்கள் டெல்லியில் இருக்கும் திகார் சிறை போல் மாற்றி, மக்களை அதில் அடைக்கலாம் என எண்ணிக் கொண்டிருக்கிறார் என்றே கருதுகிறேன்.

எனவே, ஆளுநர் அவர்களை எதிர்த்து கடந்த 5 நாட்களாக நடைபெற்று வரும் இந்த தர்ணா போராட்டத்தை உடனடியாக மத்திய அரசு கவனிக்க வேண்டும். இதுவரையில் இந்தப் பிரச்னை குறித்து மோடி அவர்கள் கண்டும் காணாமல் இருப்பது வெட்கக்கேடான ஒன்று. பிரதமர் இந்தப் பிரச்னை அறிந்து உடனடியாக இதனை தீர்த்து வைத்திருக்க வேண்டும். ஆனால், இதுவரையில் அவர் அந்தப் பணிகளில் ஈடுபடாததற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நான் வன்மையாக கண்டிக்கிறேன். அதேபோல், உடனடியாக ஆளுநர் அவர்களை மத்திய அரசு திரும்பபெற வேண்டுமென திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நானும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

அண்மையில் நீங்கள் தொலைக்காட்சி செய்திகளைப் பார்த்திருக்கலாம். யானை ஒன்று திருப்பூர் கண்ணாடிப் புதூர் என்ற மக்கள் இருக்கின்ற பகுதிக்குள் வந்துவிட்டது. அதனால் அந்தப் பகுதி மக்கள் பீதிக்கு ஆளானார்கள். உடனே, அந்த யானையை பிடித்து மீண்டும் முகாமில் அடைத்து விட்டார்கள். யானையாவது தான் பயன்படுத்தி வந்த, தான் இருந்த பகுதிக்கு தான் வந்தது. நான் ஆளுநரை தவறாகப் பேசுகிறேன் என யாரும் கருதிவிடக் கூடாது. ஆனந்த விகடன் பத்திரிகையில் கூட அந்த சின்னத்தம்பி யானையைப் பற்றி ஒரு தலையங்கமே தீட்டியிருக்கிறார்கள். அதுகூட பிடிவாதம் பிடித்திருந்தால் கூட, தன்னுடைய வழித்தடத்திற்கு வர வேண்டுமென நினைத்திருக்கிறது. ஆகவே, சின்னத்தம்பி யானை எப்படி முகாமில் அடைக்கப்பட்டு உள்ளதோ, அதேபோல் ஆளுநர் கிரண்பேடி அவர்களை உடனடியாக திரும்பபெற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

நான் ஏதோ விமர்சனம் செய்து கொச்சைப்படுத்துகிறேன் என யாரும் நினைத்து விட வேண்டாம். காரணம், இது மக்களுடைய பிரச்னை. மக்களுக்கு சேர வேண்டிய திட்டங்கள் எவ்வளவோ இருக்கிறது. இதில், மத்திய அரசு உடனடியாக தலையிட்டு தீர்வு கண்டிட வேண்டும். காரணம், அவர் வந்ததில் இருந்து மாநில அரசுக்கு இடை யூறாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். ஆகவே, மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டுமென தி.மு.கழகத்தின் சார்பில் வலியுறுத்தி, வற்புறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

செய்தியாளர்: கமல் உங்களை கடுமையாக விமர்சித்து வருகிறாரே?

ஸ்டாலின்: நான் அரசியலைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதற்கிடையில், செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, துணை நிலை ஆளுநர் கிரண்பேடி இன்று மாலை  பேச்சுவார்த்தையில் பங்கேற்க இருப்பதாக தெரிவித்தார்.

முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, மக்களின் பணம் என்பதால் நிதி சார்ந்த கோப்புக்களில், ஆராய்ந்து, அதிகாரிகளுடன் ஆலோசித்தே கையெழுத்திட முடியும் என்று தெரிவித்து உள்ளார்.