அருள்மிகு பழனியப்பர் திருக்கோயில், பேளுக்குறிச்சி, நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பேளுக்குறிச்சி என்னும் ஊரில் அருள்மிகு பழனியப்பர் திருக்கோயில் அமைந்துள்ளது.

நாமக்கல்லில் இருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் பேளுக்குறிச்சி என்னும் ஊர் உள்ளது. பேளுக்குறிச்சியில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.

கோயிலின் சிறப்புகள்

மூலவரான பழனியாண்டவர் வேடன் ரூபத்தில், மூன்றரை அடி உயரத்தில், நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

இவர் தலையில் கொண்டையும், வேங்கை மலர் கிரீடமும், கொன்றை மலரும் சூடியுள்ளார். கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்தும், காலில் காலணியும், வீரதண்டையும் அணிந்துள்ளார். இடது கையில் வேலும், இடுப்பில் கத்தியும், வலது கையில் தி ஆயுதம் எனப்படும் வஜ்ரவேலும் தாங்கியுள்ளார்.

மற்ற முருகன் கோயில்களில் சேவல் சின்னம் கொடியில் இருக்கும். இங்கே, சேவலை முருகன் கையிலேயே அடக்கி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பத்மாசுரனை போல், நீங்கள் ஆணவத்தைக் காட்டினால், உங்களை நான் அடக்குவேன் என்று முருகப்பெருமான் நமக்கு உணர்த்துவது போல் இந்த அமைப்பு இருக்கிறது.

மூலவரை நேருக்கு நேராக நின்று வணங்கினால் வேடனைப் போலவும், வலதுபுறம் நின்று வணங்கினால் ஆண் வடிவமாகவும், இடதுபுறம் நின்று வணங்கினால் பெண் வடிவமாகவும் காட்சியளிப்பது சிறப்பம்சமாகும்.

இத்திருக்கோயிலில் இடும்பனுக்கு தனிச்சன்னதி அமைந்துள்ளது. இடும்பனுக்கு பூஜை முடிந்த பின்னரே, முருகனுக்கு பூஜை செய்வது வழக்கமாக உள்ளது.

இக்கோயிலில் பழனியாண்டவர் சன்னதியின் இடதுபுறம் விஷ்ணு சன்னதியும், எதிரில் கருடாழ்வாரும் உள்ளனர்.

வலதுபுறம் நவகிரகம் மற்றும் சனீஸ்வரர் சன்னதி அமைந்துள்ளது. மண்டப உச்சியில் ராகு கேது பாம்புகள் சூரிய, சந்திரரைப் பிடிக்கும் கிரகண சிற்பம் அமைந்துள்ளது.

இக்கோயிலின் மலையடிவாரத்தில் பாறைகளுக்கு இடையே உள்ள யானை வடிவிலான வற்றாத சுனையை யானைப்பாழி தீர்த்தம் என்கின்றனர்.

திருவிழாக்கள்

கந்தசஷ்டி, கார்த்திகை தீபம், தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், பௌர்ணமி ஆகியவை இக்கோயிலில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

பிரார்த்தனைகள்

தோல் மற்றும் எலும்பு நோய்கள் குணமாவதற்கும், குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு மகப்பேறு கிடைக்கவும் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி பிரார்த்தனை செய்கின்றனர்.

நேர்த்திக்கடன்கள்

இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் காவடி எடுத்தும், அலகு குத்தியும், மொட்டை போட்டும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.