நாமக்கல்,
நாமக்கல் அருகே திருமணத்திற்கு மறுத்த 16 வயது பெண்ணை அவரது பெற்றோரே எரித்துக்கொன்றதாக புகார் எழுந்துள்ளது.
நாமக்கல் அருகேயுள்ள வளையப்பட்டி, வாழவந்தி கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது இரண்டாவது மகள் ஐஸ்வர்யா. அவருக்கு 16வயதுதான் ஆகிறது.
ஐஸ்வர்யாவுக்கும்,  சேந்தமங்கலத்தை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும் திருமணம் செய்ய இரு வீட்டு பெற்றோர்களும் முயற்சி செய்துள்ளனர்.

ஆனால், ஐஸ்வர்யாக தற்போது திருமணம் வேண்டாம் என மறுத்துள்ளார். ஆனால் பெற்றோர் பிடிவாதமாக இருக்கவே,  இது குறித்து நாமக்கல்லில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.
குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரிகள்  ஐஸ்வர்யா வீட்டிற்கு வந்து விசாரணை செய்து, பெற்றோர்களை எச்சரித்துவிட்டு, ஐஸ்வர்யாவை மீட்டு அரசு காப்பகத்தில் சேர்த்தனர்.
இதற்கிடையில் கடந்தவாரம், ஐஸ்வர்யாவின் உறவினர்கள் சிலர் அரசு காப்பகம் வந்து, ஐஸ்வர்யாவின் அப்பா தங்கராஜ் சீரியஸாக இருப்பதாக கூறி ஐஸ்வர்யாவை வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அடுத்த இரண்டு நாட்களில் ஐஸ்வர்யா உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டதாக கூறி, யாருக்கும் தெரியாமல் அவரது உடலை எரித்துள்ளனர்.
இதன் காரணமாக சந்தேகமடைந்த சிலர், ஐஸ்வர்யாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் இதுகுறித்து ஐஸ்வர்யாவின் பெற்றோர்களை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்து வருகின்றனர்.
திருமணத்திற்கு மறுத்து,  பெற்றோரை காட்டி கொடுத்ததால்,  பெற்றோர் துன்புறுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டிருப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.
16 வயதேன ஆன இளம்பெண் ஒருவர் எரித்துகொள்ளப்பட்ட செய்தி அந்த பகுதியில் காட்டுத்தீயாக பரவி வருகிறது.