புதுக்கோட்டை: சசிகலா பா.ஜ.க.வில் சேர்ந்தால் நாங்கள் அவரை வரவேற்போம் என மாநில பாஜக துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். அதிமுகவில் இருந்த நீக்கப்பட்ட சசிகலா, தனியாக மாநிலம் முழுவதும் சென்று தனது ஆதரவாளர்களை திரட்டி வரும் நிலையில், சசிகலாவை பாஜகவில் சேர்க்கும் வகையில், சசிகலாவுக்கு வரவேற்பு தெரிவித்து உள்ளார்.

அதிமுகவில், இருந்து சசிகலா நீக்கப்பட்டாலும், அவருக்கு ஒரு குறிப்பட்ட சாதியினர் ஆதரவு இருந்து வருகிறது. இதனால், அதிமுகவின் இரு தலைமைகளும் அவரை அவரை கட்சிக்குள் சேர்ப்பதில் முட்டி மோடி வருகின்றன. இந்த நிலையில், அவரை பாஜகவில் சேர்க்க அக்கட்சி நிர்வாகிகள் தூண்டில் வீசி வருகின்றனர். இதில் சசிகலா சிக்குவாரா என்பது போகப்போகத் தான் தெரியும்.

புதுக்கோட்டையில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்துகொண்ட முன்னாள் அதிமுக அமைச்சரும், தற்போதைய  தமிழக சட்டமன்ற பா.ஜ.க. துணைத்தலைவரருமான நயினார் நாகேந்திரன் அங்கு சில அதிமுக நிர்வாகிகளையும் சந்தித்து பேசினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது,  அ.தி.மு.க.வில் சசிகலாவை சேர்த்துக் கொண்டால் அக்கட்சி வளரும் என்று கூறியதுடன்,  அ.தி.மு.க. வில் அவரை சேர்த்துக் கொள்ளவில்லை என்று கூறினால் பா.ஜ.க. அவரை வரவேற்கும். அவரது வரவு  பாரதிய ஜனதா கட்சிக்கு உறுதுணையாக இருக்கும். இதற்கான முயற்சிகளை நாங்கள் எடுத்து வருகிறோம் என்று கூறினார்.

மத்திய அரசு என்று கூறுவதை தி.மு.க.வினர் பெருமையாக கருதுகின்றனர். தி.மு.க. தங்களை பெருமைப்படுத்திக் கொள்வதை முன்னெடுத்து செல்கிறதே தவிர, மக்கள் பிரச்சினையை, மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற கருத்தை அவர்கள் முன்னெடுக்கவில்லை தமிழகத்தில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை தொடர்பாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் முதலமைச்சர் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.

நயினார் நாகேந்திரனின் பேச்சை வைத்து பார்க்கும்போது, சசிகலாவை பாஜகவுக்கு இழுக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவே தெரிகிறது. சசிகலாவுக்கு சில மாவட்டங்களில்,  அவரது சமுதாயத்தினர் வாக்குவங்கி உள்ளதால், அதை தன்வசப்படுத்தும் நோக்கில்தான் பாஜக, அவரை கைக்குள் வைத்துக்கொள்ள முயற்சித்து வருகிறது.

இதனால்தான், முன்னாள் அதிமுக அமைச்சர் பொன்னையன் தமிழகத்தில் பாஜக வளருவது என்பது அதிமுகவுக்கு நல்லது அல்ல; ஆகையால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் பொன்னையன் பேசியிருப்பது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.