சமந்தா மற்றும் நாக சைதன்யா உறவு சிக்கல்கள் இருப்பதாக இணையவாசிகள் தொடர்ந்து பேசி வந்தனர். முன்னதாக சமந்தா திருப்பதி கோயிலுக்கு வந்திருந்த போது அங்கு ஒருவர் இதுகுறித்து கேட்டதற்கு எரிச்சலாக சமந்தா பதிலடி கொடுத்திருந்தார்.

இதனிடையே கடந்த செப்டம்பர் 24-ஆம் தேதி சேகர் கம்முலா இயக்கத்தில் நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி இணைந்து நடித்து, வெளியான ‘லவ் ஸ்டோரி’ திரைப்படம் திரையரங்கில் நேரடியாக வெளியாகி நல்ல விமர்சனங்களையும் பெற்றது.

இப்படம் தொடர்பான சந்திப்பாக, நடிகர் அமீர்கான், நாக சைதன்யாவின் இல்லத்தில் விருந்தில் கலந்து கொண்டபோது, அதில் சமந்தா கலந்துகொள்ளாதது, முன்னதாக சமந்தா தம் ட்விட்டரில், சமந்தா அக்கினேனி என்று இருந்த பெயரை சமந்தா ரூத் பிரபு என மாற்றியது என பலவற்றையும் வைத்து இணையவாசிகள் பலரும் இந்த தம்பதியரின் உறவு குறித்து சர்ச்சைகளை கிளப்பி வந்தனர்.

இந்நிலையில் தான் சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் தாங்கள் இல்வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.

ரசிகர்களையும் திரையுலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த விவகாரம் தொடர்பாக பேசியுள்ள நடிகரும் நாக சைதன்யாவின் தந்தையுமான நாகார்ஜூனா, தமது சமூக வலைதளத்தில், “கனத்த இதயத்துடன், நான் இதைச் சொல்கிறேன்! சம்முவுக்கும்(சமந்தா) சைக்கும்(சைதன்யா) இடையில் நடந்தது மிகவும் துரதிருஷ்டவசமானது.

மனைவி மற்றும் கணவருக்கு இடையே நடப்பது மிகவும் தனிப்பட்ட விஷயம். இருவரும் எனக்கு மிகவும் பிரியமானவர்கள். என் குடும்பம் எப்போதும் இவர்கள் உறவை போற்றும். சம்மவுடன் செலவிட்ட தருணங்கள், அவர் எப்போதும் எனக்கு பிரியமானவராக இருப்பார்! கடவுள் அவர்கள் இருவரையும் வலிமையுடன் வைத்திருப்பாராக!” என தெரிவித்துள்ளார்.