சென்னை: நடந்தது நகர சபையா? நாடக சபையா? என  தமிழகஅரசுக்கு கேள்வி எழுப்பியுள்ள  கமல்ஹாசன், நவம்பர் 1ந்தேதி நடைபெற்ற  நகரசபை கூட்டம் கட்சி கூட்டம் போல் நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக மக்கள் நீதிமய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ‘கடந்த 01-11-2022 அன்று தமிழகத்தில் முதன் முறையாக பகுதி சபை, வார்டு கமிட்டிக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மநீம இதனை வரவேற்று அறிக்கையும் விடுத்திருந்தது. இக்கூட்டங்களானது அரசு நிர்வாகத்தில் மக்களின் பங்களிப்பை அதிகப்படுத்தி ஜனநாயகத்தை வலுப்படுத்தும் என்பதே மநீமவின் நம்பிக்கை, எதிர்பார்ப்பு.

நடந்தது என்ன ? தலைநகரான சென்னையில் கூட்டங்கள் நடத்தப்படவில்லை. கூட்டங்கள் நடத்தப்பட்ட பிற மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் திமுகவின் கட்சிக்கூட்டங்கள் போலவே நடத்தப்பட்டது. தாம்பரம் மாநகராட்சியில் அமைச்சர் நேரு, எம்.பி.T.R.பாலு அவர்கள் முன்னிலையில் பள்ளி மாணவரால் திமுக தலைவ ரின் கவிதை வாசிக்கப்பட்டு அனைவரும் அதை ரசித்துக் கேட்டு மகிழ்ந்தனர்!

வார்டு கவுன்சிலர் தலைமையேற்று நடத்தவேண்டும் என்ற விதிமுறையானது அப்பட்டமாக காற்றில் பறக்கவிடப்பட்டது. அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல். ஏக்கள் தலைமையில் “குறைதீர் கூட்டங்கள்” போலவே இக்கூட்டங்கள் நடத்தப்பட்டன. நிதிநிலை அறிக்கை பெரும்பாலான இடங்களில் வாசிக்கப்படவில்லை.

தீர்மானங்கள் முறையாக இயற்றப்படவில்லை என்பது போன்ற பல்வேறு குறைபாடுகள் இருந்தாலும் 12 ஆண்டுகளுக்குப் பிறகு நகரங்களில் இதுபோன்ற மக்கள் பங்கேற்கும் கூட்டங்கள் நடைபெறத் தொடங்கி இருப்பது பாராட்டுக்கும், வரவேற்புக்கும் உரியதே. அடுத்தடுத்த கூட்டங்களில் விதிமுறைகளின்படி இக்கூட்டங்கள் நடத்தப்படவேண்டும் என்று மநீம வலியுறுத்துகிறது.

மக்களை அதிகாரப்படுத்தும் கிராம சபை, நகர சபை போன்ற எல்லா வழிமுறைகளுக்கும் ஆதரவாக மநீம தலைவர் கமல் ஹாசன் அவர்களின் குரல் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கும்; கருத்திலும், களத்திலும்!’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.