பேரருளாளன் (செம்பொன்னரங்கர்) கோயில், திருநாங்கூர், நாகப்பட்டினம் மாவட்டம்.

இராவணனுடன் யுத்தம் முடித்த பின், இராமபிரான் அயோத்தி திரும்பும் வழியில் இங்குள்ள த்ருடநேத்ர முனிவரின் ஆசிரமத்தில் தங்கினார். இராவணனை கொன்ற பிரம்மஹத்தி தோஷம் நீங்க, முனிவரின் ஆலோசனைப்படி, தங்கத்தினால் மிகப்பெரிய பசுவின் சிலை செய்தார். அந்த பசுவின் உள்ளே அமர்ந்து நான்கு நாள் தவம் செய்தார். ஐந்தாவது நாள் அந்த சிலையை ஒரு அந்தணருக்குத் தானமாகக் கொடுத்தார். இப்படி செய்ததால் ராமரின் தோஷம் விலகியது. அந்த அந்தணர் பசுவின் சிலையை விற்று இக்கோயிலைக் கட்டியதால் இத்தலம் “செம்பொன்செய் கோயில்” என வழங்கப்படுகிறது.

108 திருப்பதிகளில், பெருமாள் தன் கோயிலை தானே கட்ட உதவியது இத்தலத்தில் மட்டும் தான். கிழக்கு பார்த்து நின்ற திருக்கோலத்தில் உள்ள இப்பெருமாளுக்கு செம்பொன்னரங்கர், ஹேரம்பர், பேரருளாளன் என்று பல திருநாமங்கள். இவருக்கு மேல் உள்ள விமானம் கனக விமானம். பெருமாள் பரமபதத்தில் இருப்பதால் “அருளாளன்” என வணங்கப்படுகிறார். அவரே நம்முடன் இருப்பதால் “பேரருளாளன்” ஆனார். அல்லிமாமலர் நாச்சியார், பூமாதேவியுடன் அருள்பாலிக்கிறார்.

காஞ்சிபுரத்தில் வாழ்ந்த காசியபன் என்ற அந்தணர் செல்வமிழந்து வறுமையில் வாடிக்கொண்டிருந்தார். கடைசியாக அவர் இத்தலத்திற்கு வந்து 3 நாட்களில் 32 ஆயிரம் தடவை “ஓம் நமோ நாராயணாய” என்ற மந்திரத்தை உச்சரித்து பெருமாளை மனம் உருகி வழிபட்டார். இவரது வழிபாட்டால் மகிழ்ந்த பெருமாள், இவனுக்கு செல்வங்களை வாரி வழங்கினார்.

திருவிழா:

பெருமாளின் நட்சத்திரமான ஐப்பசி சுவாதியில் பிரமோத்சவம் நடக்கிறது. தை அமாவாசைக்கு மறுதினம் திருநாங்கூரில் நடைபெறும் 11 கருட சேவைக்கு இந்தப் பெருமாளும் எழுந்தருளுகிறார்.

பிரார்த்தனை:

வறுமையில் உழல்வோர் இவரை பக்தியுடன் வழிபட்டு, நல்ல தொழில் கிடைத்து, செல்வம் பெறலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

நேர்த்திக்கடன்:

பெருமாளுக்கும் தாயாருக்கும் திருமஞ்சனம் செய்து, புது வஸ்திரம் சாற்றுகின்றனர்.

இருப்பிடம் :

சீர்காழியிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் உள்ள அண்ணன்கோவில் ஸ்டாப்பில் இறங்கி தெற்கே 3 கி.மீ. தூரம் ஆட்டோவில் சென்றால் கோயிலை அடையலாம்.