அருள்மிகு தேவாதி ராஜன் திருக்கோவில்.

பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்றான அருள்மிகு தேவாதி ராஜன் திருக்கோவில் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தேரெழுந்தூர் அமைந்துள்ளது.

தல வரலாறு :

ஒரு முறை பெருமாளும் சிவனும் சொக்கட்டான் (தாயம்) விளையாடிக்கொண்டிருந்தார்கள். பார்வதி ஆட்டத்தின் நடுவராக இருந்தார். காய் உருட்டும் போது குழப்பம் வந்தது. நடுவராக இருந்த பார்வதி பெருமாளுக்குச் சாதகமாகக் கூறினார்.

அதனால் சிவனுக்குக் கோபம் வந்து பசுவாக மாறும் படி சாபமிட்டார். பார்வதி பசுவாக மாறியவுடன், துணைக்குச் சரஸ்வதியும், லட்சுமியும் பசுவாக மாறி பூமிக்கு வந்தார்கள். இவர்களை மேய்ப்பவராகப் பெருமாள் ‘ஆ”மருவியப்பன் என்ற திருநாமத்துடன் இத்தலத்தில் ஆட்சி செய்கிறார்.

தலப்பெயர் விளக்கம் :

உபரிசரவசு என்ற மன்னன் வானில் உலா வரும் போது, தேரின் நிழல் எதன் மீது பட்டாலும் அது கருகிவிடும்படி வரம் பெற்றிருந்தான். இவன் மேலே சென்றபோது அதன் நிழல் கண்ணனின் மீதும், அவர் மேய்த்துக்கொண்டிருந்த பசுக்களின் மீதும் பட்டது. பசுக்கள் துன்பம் அடைந்தன. இவனது செருக்கை அடக்க நினைத்தார் கண்ணன். அவனது தேர் நிழல் மீது தன் திருவடியை வைத்து அழுத்தினார். மன்னனின் தேர் கீழே அழுந்தியது. அத்துடன் அவனது ஆணவமும் அழுந்தியது. இதனால் தான் இத்தலம் தேரெழுந்தூர் ஆனது.

மூலவர் தேவராஜன் 13 அடி உயரத்தில் சாளக்கிராமத்தினால் கண்ணனின் நிறம் கொண்ட கல்லானவர் மூலஸ்தானத்தில் பார்வதி பசு வடிவில் உள்ளார். மார்க்கண்டேய முனிவர் பீறவா வரம் பெற, ஆமருவியப்பனை வணங்கினார். இதனால் இவரை ஆமருவியப்பன் தன் அருகிலேயே வைத்துக்கொண்டார்.

பக்த பிரகலாதனும் மூலஸ்தானத்தில் உள்ளார். மூலஸ்தானத்தில் உற்சவர், தாயார் மூவரும் கிழக்கு பார்த்து நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றனர். மூலவரின் மேல் உள்ள விமானம் கருட விமானம். தர்மதேவதை, உபரிசரவசு, காவிரி, கருடன், அகத்தியர் ஆகியோர் இத்தல பெருமாளைத் தரிசனம் செய்துள்ளனர்.

திருவிழா :

வைகாசி திருவோணத்தில் பிரம்மோற்சவம், நவராத்திரி, வைகுண்ட ஏகாதசி, கோகுலாஷ்டமி ஆகியன முக்கிய திருவிழாக்கள்.