நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி பேராலயம் நாளை காலை திறக்கப்படும் என்று நாகை ஆட்சியர் அறிவித்து உள்ளார்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. செப்டம்பர் 8ம் தேதி மாதாவின் பிறந்த நாள் ஆகும். அதை முன்னிட்டு, வேளாங்கண்ணி பேராலயத்தில் பிறந்த நாள் விழா, 10 நாட்கள் வெகு விமரிசையாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

திருவிழா காலத்தில் வேளாங்கண்ணி முழுவதும் விழாக்கோலமாக காட்சி அளிக்கும். விழாவில் கலந்து கொள்வதற்காக வெளியூர்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் நாகை வருவர். விழாவானது, கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. .

இந் நிலையில் வேளாங்கண்ணி பேராலயம் நாளை காலை திறக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். காலை 8 மணி முதல் மாலை 5.30 மணி வரை ஆலயம் திறக்கப்படும்.  ஆலயத்தில் உள்ளூர் மக்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். செப்டம்பர் 8 வரை வெளிமாநில, வெளி மாவட்ட பக்தர்களள் வர தடை என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.