‘தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளர் திரு விஷால், ஆபத்தான ஒரு வைரஸ்’ என நடிகர் உதயா பதிலடி கொடுத்துள்ளார்.

இது குறித்து அவர், நடிகர் விஷாலுக்கு எழுதிய பகிரங்க கடிதம்:

“தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளர் திரு விஷால் அவர்களுக்கு, வணக்கம்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர் என்ற உரிமையிலும், சக நடிகர்கள் நலன் கருதியும் இந்த கடிதத்தை தங்களுக்கு எழுதுகிறேன்.

நடிகர் சங்க தேர்தலில் தங்கள் அணி வெற்றி பெற்றதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் கடந்த ஞாயிறன்று சென்னையில் நடைபெற்றது. தங்களது அணியின் வெற்றி குறித்த மாற்றுக்கருத்து எங்களுக்கு உண்டு. ஆனாலும் சங்கத்தின் ஒற்றுமை முக்கியம் எனக் கருதி தேர்தலில் தங்களை எதிர்த்து போட்டியிட்ட அணியை சேர்ந்தவர்களும் இக்கூட்டத்தில் முழுமனதுடன் கலந்து கொண்டோம். சங்க வளர்ச்சி நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கவும் தயாராக இருக்கிறோம்.

தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டவர்களே இத்தனை பெருந்தன்மையாக இருக்கும் போது, வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நீங்கள், அதுவும் தற்போது அனைவருக்கும் பொதுவான பொறுப்பில் இருக்கும் நீங்கள், எவ்வளவு பெருந்தன்மையுடன் இருந்திருக்க வேண்டும். ஆனால் நடந்தது என்ன?

ஜனநாயக முறைப்படி உங்களை எதிர்த்து போட்டியிட்டவர்களை வைரஸ் என்று வர்ணித்தீர்கள்.

தமிழ் திரையுலகின் வைரஸ் யார் என்பதையும் அனைவரும் அறிவார்கள், அறிந்தே உள்ளார்கள். உங்கள் பெயரும், வைரஸும் ‘வி’ எனும் ஆங்கில எழுத்தில் தொடங்குவதால் உங்களுக்கு அதன் மேல் அத்தனை பற்று போலும்.

தவிர, பல்லாண்டு கால முயற்சிகளுக்குப் பின்னர் சங்கத்தை கடனில் இருந்து மீட்ட நிலையில், மீண்டும், ‘வங்கிக் கடன் வாங்கி கட்டிடம் கட்டப்படும்’ என்கிறீர்கள். இது அனைத்து உறுப்பினர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இந்த முடிவு தற்கொலைக்கு சமமானது.

சங்க கட்டிடத்தை நடிகர்களாகிய நாமே நம்மால் இயன்ற பங்களித்து கட்டி முடிக்க முடியும் என்பது அனைவரும் அறிந்ததே. அப்படி செய்தால் மட்டுமே அதில் வரும் வருவாயைக் கொண்டு, வறுமையில் வாடும் உறுப்பினர்களுக்கு உதவ முடியும்.

ஆகவே, அனைவரின் கருத்துகளுக்கும் மதிப்பளித்து சங்கத்தின் வளர்ச்சியை முன்னெடுத்து செல்வீர்கள் என்று நம்புகிறோம். தங்கள் நேர்மறை நடவடிக்கைகளுக்கு என்றும் ஆதரவளிக்க தயாராகவே உள்ளோம்.”

இவ்வாறு உதயா தனது பகிரங்க கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
நடிகர்களுக்கு இடையேயான இந்த மோதல் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.