லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன் நடித்திருக்கும் படம் விக்ரம்.

ஜூன் 3 ம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியாக இருக்கிறது.

இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்த இந்தப் படத்தின் இசையமைப்பாளர் அனிருத், “கமல் சார் எழுதி பாடியிருக்கும் ‘பத்தல பத்தல’ என்ற இந்த பாடலுக்காக அவருடன் சேர்ந்த பணியாற்றியது மறக்கமுடியாத தருணம்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக கமலஹாசன் வெளியிட்டிருக்கும் பதிவில், “நீ எவ்வளவு பெரிய பரம்பரையைச் சேர்ந்தவன் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். உங்கள் கொள்ளு தாத்தா முதல் நீங்கள் வரை, ஒரே குடும்பத்தில் எத்தனை திறமைகள் மற்றும் சாதனைகள். நீங்கள் உண்மையிலேயே உங்கள் குடும்ப பாரம்பரியத்துக்கு ஏற்றவாறு வாழ்கிறீர்கள். என் இளம் நண்பருக்கு வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டிருக்கிறார்.

தமிழ் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே. தியாகராஜ பாகவதர் அறிமுகமான 1934 ம் ஆண்டு வெளியான பவளக்கொடி படத்தின் இயக்குனர் கே. சுப்பிரமணியம் தான் அனிருத்தின் கொள்ளு தாத்தா என்பது குறிப்பிடத்தக்கது.