சென்னை:
மிழ் திரையுலகின் முன்னணி பாடலாசிரியர் நா முத்துக்குமாரின் மரணம் பெரும் அதிர்ச்சி அளித்திருக்கிறது. சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினை இரண்டு முறை  பெற்ற அவருக்கு வயது 41தான்.
காஞ்சிபுரம் மாவட்டம் கன்னிகாபுரத்தில் ஜூலை 12, 1975-ம் ஆண்டு பிறந்தவர் நா முத்துக்குமார்.  சிறு வயதிலேயே தாயை இழந்த அவர், தந்தையின் அரவணைப்பில் வாழ்ந்தார்.  காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியில் கல்விப் படிப்பை முடித்த முத்துக்குமாருக்கு சிறு வயதில் இருந்த தமிழ் ஆர்வம் மிகுதி. அவரது தந்தையார், வீட்டிலேயே நூலகம் அளவுக்கு புத்தகங்கள் வைத்திருந்தார். அவற்றையெல்லாம் ஆர்வத்துடன் படிப்பார் முத்துக்குமார்.
திரைப்பட இயக்குநராகவேண்டும் என்பதுதான் முத்துக்குமாரின் ஆரம்பகால லட்சியமாக இருந்தது.  பிரபல இயக்குநர் மறைந்த பாலு மகேந்திராவிடம் நான்கு ஆண்டுகள் உதவி இயக்குநரா பணியாற்றினார்.
அதே நேரம், சிறந்த கவிதைகளையும் எழுதி வந்தார். அது தொகுப்புகளாகவும் வெளியானது. கவிஞர் அறிவுமதியின் அறிமுகம் கிடைக்கவே, அவர் மூலம் சில திரைப்பாடல்கள் வாய்ப்புகள் கிடைத்தன.
இயக்குநரும் நாம் தமிழர் கட்சியின் தலைவருமான சீமான் இயக்கிய வீரநடை படத்தில் பாடலாசிரியராக அறிமுகமானார் நா. முத்துக்குமார்.  அதன் பிறகு ஏராளமான திரைப்பாடல்களை எழுதினார்.  கடந்த சில வருடங்களாகவே, ஒவ்வொரு வருடமும் அதிக பாடல் எழுதியவர் என்கிற பெருமையை பெற்றுவந்தார் நா.முத்துக்குமார். 1
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள் அத்தனைப் பேருடனும் பணியாற்றியவர் நா முத்துக்குமார். இளையராஜா, ஏ ஆர் ரஹ்மான், யுவன் சங்கர் ராஜா, ஜிவி பிரகாஷ்குமார், ஹாரிஸ் ஜெயராஜ் என அனைவரும் நா.முத்துக்குமாரை கொண்டாடினார்கள்.
யுவன் சங்கர் ராஜா இசையில் தங்க மீன்கள் படத்துக்காக இவர் எழுதிய ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்… ‘ பாடலுக்கு முதல் தேசிய விருதினை வென்றார்.
அடுத்து ஜிவி பிரகாஷ் இசையில் சைவம் படத்தில் இடம்பெற்ற அழகே அழகே… பாடலுக்காக இரண்டாவது தேசிய விருதினை வென்றார், நா.மு.
தொடர்ந்து பத்தாண்டுகள் தமிழ் சினிமாவின் முதன்மை பாடலாசிரியராகத் திகழ்ந்தா இவர்,
சமீபத்தில் அமெரிக்காவுக்குச் சென்றார். , அங்கு ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் அமையவிருக்கும் தமிழ் இருக்கைக்கான நிதி திரட்டல் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
கடந்த சில நாட்களாகவே மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருந்த முத்துக்குமார், இன்று மாரடைப்பால் மரணமடைந்தார்.
நா முத்துக்குமாருக்கு மனைவியும்  ஆண், பெண் என இரு  குழந்தைகளும் உள்ளனர்.