மும்பை

மும்பை மருத்துவ மாணவி ராகிங் தற்கொலைக்கு நீதி கேட்கும் ஹேஷ்டக் டிரெண்டாகி வருகிறது

மும்பையின் டோபிவாலா தேசிய மருத்துவமனை மருத்துவக்கலூரி மிகவும் புகழ் பெற்றதாகும்.   இங்கு பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்புக்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.    கடந்த மே மாதம் இந்த கல்லூரியின் பட்டமேற்படிப்பு கல்வியில் பாயல் தத்வி என்னும் மாணவி சேர்ந்துள்ளார்.

பாயல் தத்வி பழங்குடியினர் சமுதாயத்தை சேர்ந்தவர் ஆவார்.    தனது மருத்துவ கல்வி ஆர்வத்தினால இவர் பட்டமேற்படிப்பு கல்வியில் சேர்ந்துள்ளார்.  இதே கல்லூரியில் ஹேமா அகுஜா, பாக்தி, மேகா ஆகியோர் சீனியர் மாணவிகள் ஆவார்கள்.   இவர்கள் மூவருக்கும் பாயல் மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளது.

பாயல் பழங்குடி சமுதாயத்தினர் என்பதால் அவரை தொடர்ந்து சமுதாயப் பெயரை சொல்லி அழைத்து அனைவர் முன்னிலையிலும் கிண்டல் செய்துள்ளனர்.  அது மட்டுமின்றி கல்லூரியின் வாட்ஸ்அப் குழுவிலும் அடிக்கடி கிண்டல் செய்துள்ளனர்.   இதை பாயல் எதிர்த்துள்ளார்.

அதனால் அவரை இந்த மூன்று  மாணவிகளும் செய்முறை வகுப்புக்குள் நுழைய விடாமல் தடுத்துள்ளனர்.   இது குறித்து கல்லூரி நிர்வாகத்தினரிடம் பாயல் புகார் அளித்துள்ளார்.  இதனால் ஆத்திரம் அடைந்த மூவரும் மேலும் அவமானப் படுத்தி உள்ளனர்.   இந்த கொடுமை தாங்காமல் பாயல் இந்த மாதம் 22 ஆம் தேதி தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

பாயலின் தற்கொலை நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.    பாயலின் பெற்றோர்கள் தங்கள் மகளின் மரணத்துக்கு நீதி கேட்டு குரல் எழுப்பி உள்ளனர்.    தற்கொலைக்கு காரணமான மாணவிகள் தலைமறைவாகி விட்டனர்.

மருத்துவ மாணவி ராகிங் தற்கொலைக்கு நீதி கேட்டு நெட்டிசன்கள் தொடர்ந்து டிவிட்டரில் பதிவுகளை பதிந்து வருகின்றனர்.   தங்கள் பதிவில் #JusticeForDrPayal என்னும் ஹேஷ்டாக்கை பதிந்து டிரெண்ட் ஆக்கி வருகின்றனர்.