தேனி: முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கேரள அரசு கடந்த மாதம் தண்ணீர் திறந்து விட்டது சர்ச்சையான நிலையில், தற்போது அணை யின்  நீர்மட்டம் 141 அடியை எட்டி உள்ளது. இதனால், கரையோர பகுதிகளுக்கு  இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாடு முழுவதும்  பரவலாக கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக அணைகள், ஏரிகள், ஆறுகள் ஆகியவை நிரம்பிக் காணப்படுகின்றன. தொடர்ந்து மழை பெய்து வருவதால், பல பகுதிகளில் காட்டாற்று வெள்ளமும் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதற்கிடையில், தமிழகம் கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணையில் தண்ணீர் 138 அடியாக அதிகரித்த நிலையில், “ரூல் கர்வ்’ முறைப்படி கேரளாவிற்குள் உபரி நீர் திறந்து விட்டது.  கேரள மாநில அரசு, சட்டத்துக்கு விரோதமாக, தண்ணீரை திறந்து விட்டது சர்ச்சையானது. உச்சநீதிமன்றம் 142அடி வரை தண்ணீரை தேக்கலாம் என்று உத்தரவிட்டுள்ள நிலையில், கேரள அரசு தன்னிச்சையாக தண்ணீர் திறந்துவிட்டது கடுமையான விமர்சனங்களை எழுப்பியது.

இந்த சர்ச்சைக்களுக்கு இடையே  முல்லைப் பெரியாறு அணை 141 அடியை எட்டியுள்ளது. 152 அடி கொண்ட முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை நீரைத் தேக்கி கொள்ள உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் நீர்மட்டம் தற்போது 141 அடியை தொட்டு உள்ளதால் அணைக்கு நீர்வரத்து 3340 கன அடியாக உள்ளது .

இதன் காரணமாக கால்வாய் கரையோர பகுதிகளான  வண்டிப்பெரியாறு , சப்பாத்து, உப்பு தரை உள்ளிட்ட நீரோட்ட பாதைகளுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணை 142 அடியை எட்டினால் அணையில் இருந்து 13 மதகுகள் வழியாக கேரளாவிற்கு உபரி நீர் திறந்துவிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.