டில்லி

ட்டவிரோத செயல்பாடுகள் தடைச் சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவாகத் தனது கட்சியை மீறி முலாயம் சிங் யாதவ் வாக்களித்துள்ளார்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் சமாஜ்வாதி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் இணைந்து போட்டியிட்டன.  இந்த கூட்டணி போட்டியிட்ட பல இடங்களில் தோல்வி அடைந்தது.    சமாஜ்வாதி கட்சியின் நிறுவனரும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவின் தந்தையுமான முலாயம் சிங் யாதவ் இந்த கூட்டணி அமைந்தது குறித்து மிகவும் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.

கடந்த மக்களவையின் நிறைவு உரையின்போது பிரதமர் மோடி மீண்டும் பதவிக்கு வர தாம் விரும்புவதாக முலாயம் சிங் யாதவ் தெரிவித்தார்.  அப்போது இது கடும் சர்ச்சையை  உண்டாக்கியது.    சமாஜ்வாதி கட்சியின் சார்பில் வெற்றி பெற்றவர்களில் முலாயம் சிங் யாதவ் ஒருவர் ஆவார்.   மக்களவையில் சமாஜ்வாதி கட்சி ஆளும் பாஜகவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

பாஜக அரசு சட்டவிரோத செயல்கள் தடை சட்டத்தில் திருத்தம் செய்து மசோதா ஒன்றை மக்களவையில் அளித்தது.  இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.  இந்த சட்டத் திருத்தம் ஒரு பொடா போன்ற ஒரு அடக்குமுறை சட்டம் என  அவர்கள் விமர்சித்து வந்தனர்.

சமாஜ் வாதி கட்சியின் சார்பில் வெற்றி பெற்ற முகமது ஆசம் கான் மற்றும் எஸ் டி ஹாசன் ஆகியோர் இந்த மசோதாவுக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.   ஆனால் முலாயம் சிங் யாதவ் இந்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்.   இந்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களிப்பது எவ்வாறு என்பதைக் குறித்து அவையில் பாஜக உறுப்பினர்களிடம் கேட்டு முலாயம் தெரிந்துக் கொண்டுள்ளார்.

முலாயம் சிங் யாதவ் இந்த மசோதாவுக்கு ஆதரவாக தனது கட்சியை எதிர்த்து வாக்களித்தற்கு அமித் ஷா அவருக்கு நன்றியை தெரிவித்துள்ளார்.   எனினும் சமாஜ் வாதி கட்சி உறுப்பினர்கள் இந்த மசோதாவை நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.