துரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கி. மீ. தொலைவில் உள்ளது கீழ மாசி வீதி. இங்கே அமைந்துள்ள ஸ்ரீமொட்டை விநாயகர் கோயில் அமைந்துள்ளது.

அன்னை பார்வதி தனது பாதுகாப்புக்காக ஒரு வாலிபனைப் படைத்தாள். அவனுக்கு “கணபதி‘ என பெயர் சூட்டித் தனது உலகத்தின் காவலுக்கு நிறுத்தி வைத்தாள். ஒருமுறை தேவர்கள் அம்மையைக் காண வந்தனர். அவர்களை உள்ளே விடக் கணபதி மறுத்து விட்டார். அவர்கள் கணபதியை மீறிச்செல்ல முயலவே, அவர்களுடன் போரிட்டு விரட்டி விட்டார். தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். அவரும் கணபதியிடம் நேரில் வந்து பேசிப்பார்த்தார். சிவனையும் உள்ளே விடக் கணபதி மறுக்கவே, கோபம்கொண்டது போல் நடித்த சிவன், கணபதியின் தலையை வீழ்த்தி விட்டார். இதையறிந்த பார்வதி, தன்னால் உருவாக்கப்பட்ட கணபதிக்கு மீண்டும் உயிர்கொடுக்கும்படி வேண்டினாள். சிவன் அவருக்கு யானையின் தலையைப் பொருத்தி முழு முதல் பொருளாக்கினார். தான் உட்பட யாராக இருந்தாலும் தன் மைந்தன் கணபதியை வணங்கியபிறகே பிறரை வணங்க வேண்டும் என்றார். விநாயகரை கணங்களுக்கெல்லாம் அதிபதியாக்கினார்.

சிவன், கணபதியின் தலையை வீழ்த்தியதை உணர்த்தும் விதமாக விநாயகர், இங்கு தலையில்லாமல் மொட்டைக் கணபதியாக அருளுகிறார்.

வியாபாரிகள் தினமும் தங்களது தொழிலை தொடங்கும் முன்பு கடைச்சாவியை இவரிடம் வைத்துப் பூசை செய்து விட்டுச் செல்கின்றனர். இவ்வாறு செய்வதால் தமது தொழில் சிறப்பதாக அவர்கள் நம்புகின்றனர். எனவே, இவர் “வியாபாரப் பிள்ளையார்‘ என்றும் அழைக்கப்படுகிறார்.புதிதாக ஏதேனும் செயலைத்தொடங்கும்போது சீட்டு மூலம் உத்தரவு கேட்கும் முறையும் இங்குள்ளது.

இப்பகுதியில் உள்ள அறுவை சிகிச்சை நிபுணர்கள் பலர், அறுவை சிகிச்சை செய்யும் முன்பு இவருக்கு தேங்காய் காணிக்கை செலுத்திவிட்டே பணியைத் துவக்குகின்றனர்என்பதை நம்பியே ஆகவேண்டும்.

கல்வியில் சிறப்பிடம் பெற, வியாபாரம் விருத்தியடைய இவரிடம் வேண்டிக்கொள்ளலாம். விநாயகருக்கு அருகம்புல் மாலை, புத்தாடை அணிவித்தும், கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.