சென்னை :

2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வின் வெற்றியை தடுப்பதற்கு தேவையான எந்தவொரு சிறிய நடவடிக்கையையும் பா.ஜ.க. விட்டுவிடாது என்பதையும், அதற்காக தன் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து துறைகளையும் கட்டவிழ்த்துவிடும் என்பதை தொடர்ந்து கூறிவரும் பத்திரிகையாளரும் சமூக ஊடகவியலாளருமான ‘சவுக்கு’ சங்கர், பா.ஜ.க. வின் செயல்திட்டங்களில் அமலாக்கத்துறையின் பங்கு என்ன ? என்பது குறித்து தனது முகநூல் பக்கத்தில் கேள்வியெழுப்பியுள்ளார். அதில் :

நாளிதழ்களிலும், செய்தி தொலைக்காட்சிகளிலும் விளம்பரம் மேற்கொண்டு வரும் “மை இந்தியா பார்ட்டி” எனும் கட்சியின் நிறுவனரும் தொழிலதிபருமான அனில் குமார் ஓஜா, இன்னும் 5 ஆண்டுகளில் தமிழகத்தை “வரி விலக்கு” மாநிலமாக்குவேன் என்று பல வண்ண விளம்பரங்களை பல்வேறு தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழில் அரை பக்கம், ஒரு பக்கம் என விளம்பரப் படுத்திவருகிறார்.

தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக அவர் அமர்ந்தாலும் இந்த வாக்குறுதியை அவரால் எவ்வாறு நிறைவேற்ற முடியும் என்பது புரியாத புதிராகவே உள்ளது.

மேலும், இந்த விளம்பரத்தில் திராவிட கட்சிகளுக்கு எதிராக, பா.ஜ.க., ரஜினிகாந்த், நாம் தமிழர் உள்ளிட்டவர்கள் கூறுவது போல் “ஏமாந்தது போதும்” என்ற வாசகம் இடம் பெற்றிருக்கிறது.

யார் இந்த அனில் குமார் ஓஜா ?

அனில் குமார் ஓஜா, இயக்குனராக இருக்கும் நிறுவனங்களின் பட்டியல் இது :

1) எஸ்.எல்.ஓ ஸ்டீல்ஸ் லிமிடெட்,

2) ஸ்ரீ மகாலட்சுமி மெட்டல் அண்ட் ஸ்கிராப் பிராசசிங் பிரைவேட் லிமிடெட்,

3) எஸ்.எல்.ஓ ஸ்டீல் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்,

4) எஸ்.எல்.ஓ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (3 & 4 க்கு இடையிலான வித்தியாசம் என்னவென்பது அவருக்கு தான் வெளிச்சம்)

5) எஸ்.எல்.ஓ பில்ட்கான் பிரைவேட் லிமிடெட் ,

6) அரன் ஸ்டீல்ஸ் லிமிடெட், 7) எஸ்.எல்.ஓ இந்தியா லிமிடெட்.

இத்தனை நிறுவனங்களின் பட்டியலை பார்க்கும் போதே இந்த நிறுவனங்கள் மோசடியில் ஈடுபட்டிருக்கும் வாய்ப்பு இருக்குமோ என்று எண்ணத்தோன்றும்.

அனில் குமார் ஓஜாவின் எஸ்எல்ஓ ஸ்டீல் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் அரன் ஸ்டீல்ஸ் லிமிடெட் (3 & 6) மீது கார்ப்பரேஷன் வங்கியில் 284.66 கோடி ரூபாய் மோசடி செய்ததற்காக சிபிஐயின் பெங்களூரு பிஎஸ் அண்ட் எஃப்சி கிளை வழக்கு பதிவு செய்துள்ளது.

“வரி விலக்கு” தருவதாக கூறும் அனில் குமார் ஓஜா மீது பதிவு செய்யப்பட்டிருக்கும் முதல் தகவல் அறிக்கை :

மோசடி கடன் உத்தரவாத கடிதங்கள் மூலம் கார்ப்பரேஷன் வங்கியில் கடன் வாங்கிய அனில் குமார் ஓஜா, கடன் தொகையை ரியல் எஸ்டேட் வணிகத்தில் முதலீடு செய்துள்ளார்.

2003 முதல் கடன் வசதிகளை அனுபவித்து வரும் எஸ்.எல்.ஓ இண்டஸ்ட்ரீஸ், 2015-16 நிதியாண்டிற்கான தற்காலிக அல்லது தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைகளையும், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான மதிப்பீடுகளையும் வங்கிக்கு வழங்கவில்லை. மேலும் தனது நிறுவனத்தின் வரவு செலவு கணக்கை ஆய்வு செய்யவும் அனுமதிக்கவில்லை.

சிட்டி யூனியன் வங்கி, கோட்டக் மஹிந்திரா வங்கி, ஐசிஐசிஐ வங்கி போன்ற பல்வேறு வங்கிகளில் தனது நிறுவன வங்கி பரிவர்த்தனைகளை மாற்றியதன் மூலம், இந்த நிறுவனத்தின் நிதி செயல்பாடுகளை கார்ப்பரேஷன் வங்கி முழுமையாக தெரிந்துகொள்வதை தடுத்துவந்தது.

இதனை தொடர்ந்து, 2018 மார்ச் 9 ல் எஸ்.எல்.ஓ இண்டஸ்ட்ரீஸின் வங்கி கணக்குகளை மோசடி கணக்குகள் என்று வகைப்படுத்தியது, பின்னர் கடந்த மாதம் இது தொடர்பாக சிபிஐக்கு புகார் பதிவு செய்யப்பட்டது.

இயக்குநர்கள் அனில் குமார் ஓஜா, அருண் சர்மா, எஸ்.எல்.ஓ இண்டஸ்ட்ரீஸின் அசோக் குமார் சர்மா மற்றும் அரன் ஸ்டீல்ஸ் ஆகியோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து, பணமோசடி தடுப்புச் சட்டம், 2002 இன் கீழ் 82.83 கோடி ரூபாய் மதிப்புள்ள, 8 அசையா சொத்துக்கள் மற்றும் 74 வாகனங்கள் ஆகியவற்றை அமலாக்கத் துறை, கடந்த 7 அக்டோபர் 2020 அன்று இந்த வழக்கில் இணைத்துள்ளது.

ஊழலற்ற ஆட்சி

இந்தநிலையில், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையால் குற்றம் சாட்டப்பட்டுள்ள அனில் குமார் ஓஜா தனது “மை இந்தியா பார்ட்டி” எனும் புதிய கட்சியை, சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் இன்று தொடங்க இருப்பதாக விளம்பரப்படுத்தியிருக்கிறார்.

மேலும், “செழிப்பான, பாதுகாப்பான, ஆரோக்கியமான, ஊழலற்ற தமிழக அரசை அமைப்பதே” தனது குறிக்கோள் என்று அவர் கூறுவது நகைப்புக்குரியதாக உள்ளது.

அமலாக்கத்துறையால் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு முடக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில், கட்சியை நடத்துவதற்கும், இவ்வளவு விளம்பரங்களை வெளியிடுவதற்கும், மற்ற மாநிலங்களில் நடத்தியது போல் தமிழகத்திலும் வாக்குகளை பிரிக்க களமிறங்கியிருக்கும் அனில் குமார் ஓஜா-விற்கு பணம் எங்கிருந்து வந்தது ? என்பது புரியாத புதிராகவே உள்ளது என்று பதிவிட்டிருக்கிறார்.

– நன்றி – ‘சவுக்கு’ சங்கர்