சென்னை: தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று துணைபட்ஜெட் உள்பட 19 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையில் தமிழக சட்டமன்றப் பேரவை 3 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி,  கடந்த திங்கள் கிழமையன்று (14ந்தேதி) சட்டசபை கூடியது. முதல்நாள் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து சபை ஒத்தி வைக்கப்பட்டது.

2வது நாளான நேற்று (15ந்தேதி)  சட்டப்பேரவையில்  5 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறை வேற்றப்பட்டன.

இந்த நிலையில் இன்று மேலும் பல மசோதாக்கல் செய்யப்பபட்டன.  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செல்லூர் கே. ராஜூ, எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், கே.பி. அன்பழகன், துரை கண்ணன், கடம்பூர் ராஜூ, கே.சி. வீரமணி ஆகியோர் அவர்களது துறையின் சார்பில் இந்த மசோதாக்களை தாக்கல் செய்தனர்.

அதன்படி,

1) ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை சட்ட முன்வடிவு,

2) தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் திருத்த சட்ட முன்வடிவு,

3) மெட்ராஸ் பொருளாதார பள்ளி சட்ட முன்வடிவு,

4) தமிழ்நாடு நகர் ஊரமைப்பு திருத்த சட்டமுன் வடிவு,

5) சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பு திருத்த சட்ட முன்வடிவு,

6) கூட்டுறவு சங்கங்கள் 3ம் திருத்த சட்ட முன்வடிவு,

7) நகராட்சி சட்டங்கள் 3ம் திருத்த சட்ட முன்வடிவு,

8) தமிழ்நாடு நீக்கறவு செய்தல் 2ம் திருத்த சட்ட முன்வடிவு,

9) தமிழ்நாடு திருமணங்கள் பதிவு செய்தல் திருத்த சட்ட முன்வடிவு,

10) நீதிமன்ற கட்டணங்கள் மற்றும் உரிமை வழக்குகள் மதிப்பீட்டு திருத்த சட்ட முன்வடிவு,

11) தமிழ்நாடு வழக்குறைஞர்களுடைய எழுத்தர்கள் நலநிதிய திருத்த சட்ட முன்வடிவு,

12) தமிழ்நாடு பொது அறக்கட்டளைகள் சட்ட முன்வடிவு,

13) அண்ணா பல்கலைக்கழகம் 2வது பிரிக்கப்படுவது தொடர்பான  சட்ட முன்வடிவு,

14) தமிழ்நாடு வேளாண் விளைபொருட்கள் சந்தைபடுத்துதல் (முறைபடுத்துதல்) 2ம் சட்ட திருத்த முன்வடிவு,

15) மதிப்பு கூட்டுவரி திருத்த சட்ட முன்வடிவு  உள்பட 19 சட்ட முன்வடிவுகள் இன்று தாக்கல் செய்யப்பட்டன.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று 2020 – 2021ம் ஆண்டின் கூடுதல் செலவிற்கான முதல் துணை நிதிநிலை அறிக்கையை சட்டசபையில் தாக்கல் செய்தார்.

இந்த மசோதாக்கள் இன்றே ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நிறைவேற்றபட உள்ளது.