கும்பகோணம்: பண மோசடியில் கைதான, பாஜக நிர்வாகிகளான ஹெலிகாப்டர் சகோதரர்கள், தங்களை ஜாமீனில் விடுவிக்க வேண்டும்  40 மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். இது பரபரப்பை எற்படுத்தி உள்ளது.

விக்டரி பைனான்ஸ் நிதி நிறுவனத்தை நடத்தி வந்த எம். ஆர். கணேஷ், எம். ஆர். சுவாமிநாதன் சகோதரர்கள், பணம் டெபாசிட் செய்தால், இரு மடங்காக திருப்பி கொடுக்கப்படும் என ஆசை வார்த்தை கூறி கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து, ஹெலிகாப்டர்கள் வாங்கி ஆடம்பரமாக வாழ்ந்து வந்தனர்.  இதுமட்டுமின்றி,  பாஜகவில் இணைந்து, மாவட்ட பாஜகலில் பொறுப்பையும் பெற்றுக்கொண்டு வலம் வந்தனர்.

இவர்கள் நிறுவனத்தில் பணம் செலுத்தியவர்கள், கட்டிய பணத்தை திருப்பி கேட்டபோது, அவர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும், சிலரை அடியாட்களை வைத்து விரட்டி அடித்து வந்துள்ளனர். இவர்களிடம் பணம் கொடுத்த ஏமாந்த   ஜபருல்லா – பைரோஜ் பானு தம்பதியினர், இதுகுறித்து காவல்துறையினர் புகார் கொடுத்தனர். அதன்பேரில் காவல்துறை விசாரணைக்கு சென்றபோது,  சகோதரர்கள் இருவரும் தலைமறைவாகினர். அவர்களை தேடிய காவல்துறையினர்,  புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அடுத்த வேந்தன்பட்டியில் இருக்கும் பண்ணை வீட்டில் இருவரும் இருப்பதாக கிடைத்த தகவலின்படி, அங்கு சென்று அதிரடியாக கைது செய்தனர். அவர்களுடன்  எம். ஆர். கணேஷ் மனைவி அகிலாண்டம், மைத்துனர் ராமச்சந்திரன், அலுவலக மேலாளர் ஸ்ரீகாந்த், உதவி மேலாளர் ஸ்ரீதரன் உள்ளிட்டோரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சகோதரர்கள் இருவரையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தனித்தனியாக 40 ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்திருக்கிறார்கள். மனுவில், 4 வயது குழந்தையை வேலைக்கார பெண் பராமரித்து வருவதாக சொல்லி பெற்றோர்களின் அன்பும் அரவணைப்பும் இல்லாமல் குழந்தை தவித்து வருவதாகவும் சொல்லி தனக்கும் ஜாமீன் கேட்டிருக்கிறார் அகிலாண்டம்.