காந்திநகர்:

குஜராத் சட்டமன்ற தேர்தலுக்காக குஜராத்தி என்ற அடையாளத்தை பிரதமர் மோடி வலியுறுத்துவது இந்திய ஒற்றுமைக்கு செய்யும் துரோகம் என விமர்சனம் எழுந்துள்ளது.

இது தொடர்பாக ‘தி பிரிண்ட்’ என்ற செய்தி இணையதளத்தில் குமார் கேத்கர் என்பவர் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதன் விபரம்…..

125 கோடி இந்தியர்களுக்கு தான் தலைவர் என்று தன்னைத் தானே பிரதமர் மோடி கூறிக் கொள்கிறார். ஆனால், தற்போது இந்த முடிவில் இருந்து பின்வாங்கி தனது குஜராத்தி அடையாளத்தை முன்நிறுத்தி குஜராத் வாக்காளர்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இது கடந்த 3 ஆண்டுகளாக விரக்தி அடைந்தும், ஏமாற்றமும் அடைந்துள்ள பெரும்பாலான வாக்காளர்களை திசை திருப்புவதற்காக குஜராத்தி கோஷத்தை மோடி எழுப்பி வருவதாக கூறப்படுகிறது. எனினும் இந்த தேர்தலில் ஒருவேளை பாஜக வெற்றி பெற்றால், அது எந்த அளவிலான ஓட்டு வித்தியாசமாக இருந்தாலும், குஜராத் மாடலுக்கு கிடைத்த வெற்றி என்று தான் மோடி கூறுவார்.

குஜராத்தி என்ற அடையாளத்துடன் மேற்கொள்ளப்படும் அரசியல் உடனடியாக ஒற்றுமையை ஏற்படுத்தி சமூகம், ஜாதி, மதம், மொழி ஆகியவற்றை வலுவடைய செய்யும். ஆனால் அதே சமயம் சமூகத்தில் இது பிரிவினையை உண்டாக்கும். சில சமயங்களில் வன்முறைக்கு வழிவகுக்கும்.

தேசிய தலைவர்கள் பெரும்பாலும் இந்தியன் என்ற அடையாளத்தை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். ஜவஹர்லால் நேரு எப்போதும் தன்னை காஷ்மீர் பண்டிட் என்று கூறிக் கொண்டது கிடையாது. நரசிம்மராவும் தன்னை தெலுங்கர் என்று வெளிப்படுத்திக் கொண்டது கிடையாது. அதேபோல் மன்மோகன் சிங்கும் சீக்கிய அடையாளத்தை ஒருபோது ஊக்குவித்தது கிடையாது.

ஆனால், தற்போது நாடு முழுவதும் பரவலாக அடையாள அரசியல் பரவி வருவது உண்மையான விஷயம். இந்தியாவில் லட்சகணக்கான கிளர்ச்சியாளர்கள் இருப்பதாக வி.எஸ்.நய்பால் எழுதியுள்ளார். தற்போது இந்த இந்த கிளர்ச்சியாளர்கள் அனைவரும் லட்சகணக்கான அடையாளங்களை கொண்டுள்ளனர். மேலும், ஒவ்வொருவருக்குள்ளும் மோதல் போக்கு உள்ளது.

குஜராத் சட்டமன்ற தேர்தல் முடிவு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் குஜராத்தி சமுதாயத்திடம் மிக ஆழமான பிளவு ஏற்பட்டிருப்பது மறுக்க முடியாத உண்மை. பட்டிதர் சமுதாயம் ஹர்திக் படேல் தலைமையில் இடஒதுக்கீடு ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது. இவர்களுக்கு நேர் எதிராக அல்பேஷ் தாகூர் தலைமையில் தாகூர் சமூக மக்கள் திரண்டுள்ளனர்.

ஜிக்னேஷ் மேவானி தலைமையில் தலித்கள் ஒன்றிணைந்துள்ளனர். ஆனால், ராகுல்காந்திக்கு குஜராத் உள்பட எங்கும் தனிப்பட்ட அடையாளம் எதுவும் கிடையாது. இந்த நுண் அடையாளங்கள் அனைத்தையும் குஜராத்தியர்கள் என்ற அடையாளம் மூலம் ஒரே குடையின் கீழ் மோடி கொண்டு வந்து வெற்றி பெறுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ராஜஸ்தானில் பத்மாவதி திரைப்படத்துக்கு எதிராக ராஜ்புட் மக்கள் போராடி தங்களது ராணுவ அடையாளத்தை பாதுகாத்து கொள்கின்றனர். ஹரியானா, பஞ்சாப், உ.பி ஆகிய மாநிலங்களில் ஜாட் சமூக மக்கள் இடஒதுக்கீடு கோரிக்கையை எழுப்பியுள்ளனர். மகராஷ்டிராவில் சுமார் 4 கோடி மராத்திகள் மிகப்பெரிய அளவிலான பேரணியை மாநிலம் முழுவதும் நடத்தியுள்ளனர்.

கூர்காலாந்து என்ற தனி அடையாளத்துடன் டார்ஜிலிங் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. காஷ்மீரியத் கோஷத்துடன் சுதந்திரம் கேட்டு ஜம்மு காஷ்மீரிலும், ஜம்முவில் பண்டித் சமூக மக்களும் பல ஆண் டுகளாக அவரவர் அடையாளங்களுக்காக போராடி வருகின்றனர். அதேபோல் இந்துக்களை ஜாதி என்ற அசல் அடையாளத்தை விட்டுவிட்டு இந்தியா முழுவதும் ஒன்றிணைக்க முடியுமா? என்ற கேள்வி எழுகிறது.

இஸ்லாமிய சமுதாயத்திலும் கீழ் ஜாதி மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் மூலம் தனித்துவமான இஸ்லாமிய சமுதாயத்தை உருவாக்குவதில் இஸ்லாமும் தோல்வி அடைந்துவிட்டது. இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களும் மொழி, ஜாதி, பிராந்தியம் என்ற அடிப்படையில் மேலும் பிரிந்து வாழ்கின்றனர் என்பது பலருக்கும் தெரியாத உண்மையாகும்.

தென் பகுதியில் வாழும் பல இஸ்லாமியர்களுக்கு உருது மொழி தெரியாது. அதேபோல் சியா இஸ்லாமியர்கள் தனி அடையாளத்தை கடைபிடிக்கின்றனர். இஸ்லாமியத்திலும் இதர பிற்படுத்தப்பட்ட சமுதாய அணியும், கிறிஸ்தவத்திலும் இதர பிற்படுத்தப்பட்ட இயக்கமும் உள்ளது.

சுதந்திர காலத்தில் ஆங்கிலேயே சிந்தனையாளர்களும், பத்திரிக்கை வர்ணனையாளர்களும் இந்தியா தானாகவே பல பிரிவுகளாக பிளவுபடும் என்று கூறுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். ஆனால் 1990ம் ஆண்டுகளில் யுகோஸ்லேவியா பிளவுகளை சந்தித்தது. 7 குடியரசு நாடுகள் உருவாகின. சோவியத் யூனியன் 15 குடியரசு நாடுகளாக மாறியது.

ஐரோப்பா ஒன்றியத்திலும் ப்ரெக்சிட், ஸ்பெயினில் இருந்து கடலோனியா, ஐக்கிய பேரரசில் இருந்து ஸ்காட்லாந்தும் தனி அடையாளம் கோரி வருகின்றன. அதேபோல் கனடாவில் குயூபெக் நீடிக்கும் என்று யாராலும் உத்தரவாதம் அளிக்க முடியாது. ஆனால், இன்று வரை இந்தியா ஒற்றுமையுடன் உள்ளது.

‘‘பெரும்பான்மையான மக்கள் வேறு மக்கள்’’ என்று ஆஸ்கர் வைல்டு குறிப்பிட்டிருந்தார். அமர்தியா சென் தனது ‘அடையாளம் மற்றும் வன்முறை: ஒரு விதியின் மாயை’ என்ற நூலில் உலகில் உள்ள பல முரண்பாடுகள், காட்டுமிராண்டித்தன செயல்கள் அனைத்தும் தனித்துவம் மற்றும் அடையாள தோற்றத்தின் மூலமே நீடித்துள்ளது என்று எச்சரித்துள்ளார்.

25 ஆண்டுகளுக்கு முன்பு பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்னர் தான் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரிக்க தொடங்கியது. ‘லவ் ஜிகாத்’ என்ற வார்த்தை இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை என்ற சிந்தனைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.

உ.பி.யில் உள்ளாட்சி தேர்தல் வெற்றியை தொடர்ந்து இந்துத்வா தலைவர்கள் அயோத்தியில் ராமர் கோவில் என்ற கோஷத்தை வெளிப்படையாக கூற தொடங்கிவிட்டனர். உச்சநீதிமன்றம் இதற்கு ஆதரவான தீர்ப்பை வழங்கினாலும், இல்லை என்றாலும் இது நடக்கும் என்ற ரீதியில் பேசுகின்றனர்.

இந்த சூழ்நிலையில் குஜராத்தி என்ற அடையாளத்தை பிரதமர் மோடி உயர்த்தி பிடிக்க தொடங்கியுள்ளார். இதனால் இந்துத்வா என்ற யோகி ஆதித்யாநாத்தின் குரலை மோடியால் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும். அதேபோல் வங்காள தேசியவாதத்தையும் கட்டுப்படுத்த முடியாது.

ஜாதி, சமூகத்திலும் எதிர்பாராத வகையில் அடையாளம் என்ற சிந்தனை ஒன்றோடு ஒன்றாக கலந்துவிட்ட போதிலும், இது வரை அது யாரையும் தொந்தரவு செய்யவில்லை. ஆபத்தையும் ஏற்படுத்தவில்லை. உதாரணமாக குஜராத்தி என்ற கோஷம் எழுப்புவதன் மூலம் வர்த்தகர், பங்குச் சந்தை புரோக்கர், தொழிலதிபர், வியாபாரி போன்றவர்களை மட்டும் தான் குறிப்பிடும்.

இது முற்றிலும் தவறானதாகும். குஜராத்தில் வர்த்தகர்கள் மட்டும் 6 கோடி பேர் கிடையாது. இங்கு விவசாயிகள், தலித் தொழிலாளர்கள், தொழிற்சாலை ஊழியர்கள், தொழில் முறை வல்லுனர்கள் என பலர் உள்ளனர்.

உலகளவில் வேண்டுமானால் ஜப்பானியர்கள், சீனர்கள், ரஷ்யர்கள், ஜெர்மானியர்கள் போன்ற அடையாளங்கள் இருக்கலாம். அடையாளப்படுத்துதல் என்பது தோற்றம் மற்றும் முற்போக்கு தனத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும். இந்தியாவில் உள்ள மீடியாக்கள் இது போன்ற செய்திகளை ஊக்குவிப்பதால் சமூக யதார்த்தத்தையும், தேர்தல் கணிப்புகளையும் சிதைக்கும்.

தேசியவாதம் என்பது மக்களையும், நாட்டையும் ஒன்றிணைப்பதாகும். தீவிர தேசியவாதம் மற்றும் ஆக்ரோஷமான அடையாள அரசியல் தேசத்தின் ஒற்றுமையையும், இந்தியாவின் சிந்தனையையும் சிதைத்துவிடும் என்பதே உண்மை.