மதுரையில் அமைய உள்ள எயிம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று தமிழகம் வர உள்ளார். எயிம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் அடிக்கல் நாட்டியதுடன் பாஜக சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் மோடி பங்கேற்று பேச உள்ளார்.

modi

நீண்ட காலமாக தமிழகத்தில் எயிம்ஸ் மருத்துவமனை அமைக்க அரசு ஓப்புதல் கோரி வந்த நிலையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதனை தொடர்ந்து ரூ.1,264 கோடி செலவில் அமைக்கப்படும் எயிம்ஸ் மருத்துவமனையில் நூறு மருத்துவர்கள் பணியாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, 750 படுக்கை வசதி கொண்ட இந்த மருத்துவமனையில் மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் எடுப்பதற்கான பல்வேறு வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளன.

இந்நிலையில் தமிழகத்தில் அமைய உள்ள இந்த மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (27.01.2019) மதுரை மாவட்டம் மண்டேலா நகரில் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று அடிக்கல் நாட்டு வைக்க உள்ளார். இவரை தவிர தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல்,நட்டா, பொன் ராதாகிருஷ்ணன், துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழக அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், செல்லூர்ராஜூ உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.

அடிக்கல் நாட்டு விழாவை தொடர்ந்து அங்கு நடைபெற உள்ள பாஜக கட்சி பொதுக்கூட்டத்தில் மோடி உரையாற்ற உள்ளார். இந்த விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காலை 11.15 மணிக்கு தனி விமானம் மூலம் மதுரைக்கு வர உள்ளார். தமிழகத்திற்கு வரும் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பதற்காக அரசு சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளான.

பிரதமர் வருகையை ஒட்டி மதுரை மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.பாதுகாப்பு பணியினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 5000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, விழா நடைபெறும் இடத்திற்கு அருகிலேயே விமான நிலையம் இருப்பதால் பிற்பகல் 2மணி வரை மதுரையில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறாப்படுகிறது. மதுரை மண்டேலா நகரில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

மதுரை அடிக்கல் நாட்டு விழாவி முடித்து கொண்டு பிரதமர் மோடி கேரள மாநிலம் கொச்சிக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.