மும்பை:
தேர்தலுக்காக வாக்குறுதிகளை அள்ளிவீசும் மோடியின் தந்திரம் தற்போது அம்பலமாகி வருகிறது.

பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி அறிவித்த ரூ.1.25 லட்சம் கோடி மதிப்பிலான நிதியுதவி திட்டம் 18 மாதங்கள் ஆகியும் இன்னும் வந்து சேரவில்லை என்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

மும்பையை சேர்ந்த அனில் கல்காலி என்பவர் கடந்த டிசம்பர் மாதம் மத்திய நிதியமைச்சகத்துக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு அளித்தார். அதில் பல மாநிலங்களுக்கு மோடி அளித்த மெகா நிதியுதவி திட்டங்கள் மற்றும் மேம்பாட்டு தொகுப்புகளின் விபரங்களை அளிக்குமாறு கேட்டிருந்தார். நிதி தொகுப்பு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பியிரு ந்தார். இந்த கேள்விகளுக்கு நிதியமைச்சக துணை இயக்குனர் ஆனந்த் பர்மார் நேரடியாக பதில் அளிக்காமல் சுற்றிவளைத்து பதில் கூறியுள்ளார்.

கல்காலி கூறுகையில்,‘‘ கடந்த 2015ம் ஆண்டு ஆகஸ்ட் 18ம் தேதி பீகார் மாநிலத்துக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 3 கோடி மதிப்பிலான சிறப்பு நிதி தொகுப்புகளை பிரதமர் மோடி அறிவித்தது பல கட்டங்களாக நிறைவேற்றப்படும் என்று ஆனந்த் பார்மர் அளித்த பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு பைசா கூட இந்த திட்டங்களுக்கு வழங்கப்படவில்லை என்பது உறுதியாகிறது’’ என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில்,‘‘ நாட்டின் பிரதமர் ஒருவர் அறிவித்த திட்டங்களுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எவ்வித நடவடி க்கையும் எடுக்கப்படாமல் இருப்பது வெட்கக்கேடான செயல். இந்த நிலையில் 7ம் கட்டமாக இறுதிகட்ட வாக்குப்பதிவு நடந்த உ.பி.யில் பெரிய பெரிய வாக்குறுதிகளை பாஜ அளித்துள்ளது. 125 கோடி மக்களுக்கு ஆளும் பாஜ வாய்ஜாலங்களை காட்டி வருகிறது. ஆனால் இந்த அரசின் நிலை வேறு விதமாக இருக்கிறது. இவர்களது வாக்குறுதிகளை மக்கள் எப்படி நம்புவார்கள்’’ என்றார் அவர்.

இதேபோல், ஜம்மு காஷ்மீர் கூட்டணி ஆட்சியில் பங்கேற்றுள்ள பாஜ கடந்த 2015ம் ஆண்டில் 80 ஆயிரத்து 68 கோடியில் நிதியுதவி திட்டம் அறிவித்தது. இதிலும் பீகார் போன்ற நிலை தான் நீடிக்கிறது. அந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை நீண்ட கால திட்டத்தின் அடிப்படையில் இந்த நிதி வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கு அடுத்தபடியாக சிக்கிம் மாநிலத்திற்கு 2016ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி சுற்றுலா மேம்பாட்டுக்காக 43 ஆயிரத்து 589 கோடி வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு இதற்கான நிதி விரைவில் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இங்கு 1994ம் ஆண்டி முதல் சாம்லிங் முதல்வராக இருந்து வருகிறார். அதோடு தேர்லும் 2019ம் ஆண்டு மத்தியில் தான் வர இருக்கிறது. இப்போது ஏன் பாஜ அரசு அவசர அவசரமாக நிதி வழங்குகிறது என்பது தான் ஆச்சர்யமாக இருக்கிறது’’ என்று கல்காலி தெரிவித்தார்.