பொதுவாழ்க்கையில் ஏச்சுக்களுக்கு உள்ளாவதாக கூறும் பிரதமர் மோடி மக்கள் குறைகளை பட்டியல் போடுவதை விடுத்து தன்னை எத்தனை முறை இழிவாக பேசுகிறார்கள் என்று குறிப்பெடுத்துக் கொண்டிருக்கிறார் என்று பிரியங்கா காந்தி விமர்சித்திருக்கிறார்.

கர்நாடக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் அனல் பறந்து வருகிறது. பாஜக சார்பில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, உ.பி. முதல்வர் யோகி ஆதித்ய நாத் உள்ளிட்டோர் பல கட்டங்களாக தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.

காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் தலைவர் கார்கே, பிரியங்கா காந்தி ஆகியோர் கடந்த இரண்டு தினங்களாக சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோலாரில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி தன்னை பிரதமர் என்றும் பாராமல் இழிவுபடுத்தி வருவதாகக் குற்றம் சுமத்தினார்.

இதற்கு பதிலளித்துள்ள காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி “பொதுவாழ்க்கைக்கு வந்துவிட்டு ஏசுகிறார்கள் என்று கூறும் முதல் பிரதமர் மோடி தான்.

அதிலும் பிரதமராக இருக்கும் ஒருவர் தன்னை இழிவுபடுத்துவதாகக் கூறுவதற்கு வெட்கப்படவேண்டாமா ?” என்று கேள்வியுழுப்பியுள்ளார்.

மேலும், “இழிவான பேச்சுக்களை மட்டுமல்ல துப்பாக்கி குண்டுக்கும் அஞ்சாமல் மக்களுக்காக தனது உயிரையும் துச்சமென எண்ணி செயல்பட்டு வரும் எனது சகோதரர் ராகுல் காந்தியிடம் மோடி கற்றுக்கொள்ள வேண்டியது உள்ளது” என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.