பெங்களூரு: நவீன கால இந்திய பெண்கள் குழந்தைகள் பெறுவதை விரும்பவில்லை என கர்நாடக அமைச்சர் கூறியிருக்கிறார். அவரது பேச்சு சர்ச்சையாக்கப்பட்டு வருகிறது.

பெங்களூரில்  நேற்று நடைபெற்ற  தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் மையத்தில் (நிம்ஹான்ஸ்) நடந்த உலக மனநல தின விழாவில் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தவர், சிறப்புரை ஆற்றினார். அவர் பேசியதாவது,

இந்தியாவில் 7-இல் ஒருவருக்கு ஏதாவதொரு வகையில் மனநல பாதிப்புகள் காணப்படுகின்றன. மன அழுத்தத்தை கையாள்வது ஒரு கலை யாகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனஅழுத்தத்தை கையாள்வதற்குரிய மிகச்சிறந்த கருவிகளாக யோகா, தியானம், மூச்சுப்பயிற்சி போன்றவற்றை நமது முன்னோா்கள் உலகத்திற்கு கற்றுத் தந்திருக்கிறாா்கள்.

கொரோனா தொற்று நமது நாட்டு மக்களிடையே கடும் மன அழுத்தத்த உருவாக்கி உள்ளது. பெருந்தொற்றால் உயிரிழந்தவா்களின் உடல்களை தொடக்கூட முடியாத பரிதாப நிலைக்கு, அவர்களின் உறவினர்கள் ஆளானது கொடுமை நடைபெற்றுள்ளது. இது அவர்களின் உறவினர்களுக்கு பெரும் வேதனையும், மனச்சோர்வையும் ஏற்படுத்தி உள்ளது.

இதுபோல பாதிக்கப்படுவர்களுக்கு னநல ஆலோசனைகளை வழங்க அரசு முன்வந்தது. கா்நாடகத்தில் இதுவரை 24 லட்சம் கொரோனா நோயாளி களுக்கு மனநல ஆலோசனைகளை வழங்கியிருக்கிறோம். மனநல ஆலோசனைகளை இணையவழியில் வழங்குவதற்கு நிம்ஹான்ஸ் பேருதவியாக இருந்து வந்துள்ளது.

தற்போது நமது நாட்டு இளம் தலைமுறையினரிடையே மேற்கத்திய கலாச்சாரம் வேரூன்றி வருகிறது. மேற்கத்திய பண்பாட்டுக் கூறுகளை இந்திய சமூகம் உள்வாங்கிக் கொண்டுள்ளது துரதிருஷ்டவசமானது.

நவீன காலத்து பெண்கள் திருமணத்திற்கு பிறகும் குழந்தை பெற்றுக்கொள்ள தயங்குகின்றனர். இதைக் கூற வருத்தமாக உள்ளது. ஒருவேளை திருமணம் செய்துகொண்டாலும், குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவதில்லை. தனியாக வாழவே விரும்புகின்றனர். அல்லது,  வாடகைத் தாய் வாயிலாக குழந்தையை பெற்றெடுத்து வளா்க்கவே விரும்புகிறாா்கள்.

நமது சிந்தனையில் தலைகீழ் மாற்றம் நடந்துள்ளது. இது சரியான போக்கல்ல. நமது குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு இணைந்து வாழவும் மறுத்து வருகின்றனர். தாத்தா, பாட்டி உடனிருப்பதைக் கூட மறந்து விடலாம். ஆனால், தாய், தந்தையரைக் கூட உடன் வைத்துக்கொள்ள தயங்குவது வேதனை அளிக்கிறது.

இவ்வாறு கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

அமைச்சரின் பேச்சு சர்ச்சையாக்கப்பட்டு வருகிறது.  சமுக வலைதளங்களில் எதிர்ப்பும், ஆதரவும் எழுந்து வருகிறது.