டில்லி

மொபைல் சேவை குறைபாடு குறித்த புகார்களுக்கு நுகர்வோர் நீதிமன்றத்தை நேரடியாக அணுகலாம் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது

கடந்த 2014 ஆன் ஆண்டு குஜராத் மாநிலம், அகமதாபாத்தைச் சேர்ந்த அஜய் குமார் அகர்வால் தனியார் மொபைல் நிறுவனத்துக்கு எதிராக மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் அளித்தார். அவர்,  ”நான் போஸ்ட் பெய்ட்’ முறையில்மொபைல்  சேவையைப் பயன்படுத்தி வந்தேன். கடந்த 2013ம் ஆண்டு நவ.8ம் தேதி முதல் டிசம்பர் 7ம் தேதி வரையிலான கட்டணம்  ரூ.24,609.51 செலுத்தும்படி கூறினார்கள்.

ஆனால் எனக்கு சராசரியாக மாதந்தோறும் ரூ.555 கட்டணம் மட்டுமே  வந்தது.  இருப்பினும், திடீரென அதிக கட்டணம் கேட்டது அதிர்ச்சியை  எனக்கு ஏற்படுத்தியது.  ஆகவே, அதிக கட்டணம் வசூலித்ததற்காக எனக்கு நஷ்டஈடாக ரூ.22,000-ம், அதற்கான வட்டியையும் வழங்க உத்தரவிட வேண்டும்,’ என்று கோரியிருந்தார்.

அந்த மொபைல் நிறுவனம் ‘1885ம் ஆண்டு தொலைதொடர்பு சட்டம் ‘7 பி’ பிரிவின் படி தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க நுகர்வோர் நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை,’ என்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.  உச்சநீதிமன்றத்தில் இதை நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், சூர்யகாந்த் மற்றும் விக்ரம் நாத் அடங்கிய அமர்வு விசாரித்தது.

விசாரணை முடிவில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் , ”கடந்த 1986ம் ஆண்டின் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்படி, தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சேவையில் ஏதாவது குறைபாடு இருந்தால் அதற்கு நிவாரணம் பெற நுகர்வோர் நீதிமன்றத்தை நுகர்வோர்கள் நேரடியாக அணுகலாம்,:’ எனத் தீர்ப்பளித்துள்ளனர்.