சென்னை:
மிழகத்திற்கு வர வேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகையைப் பெற்றிட முதலமைச்சர் பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

சரக்கு மற்றும் சேவைகள் வரி (ஜி.எஸ்.டி) சட்டத்தைச் செயல்படுத்தியதால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பினை ஈடுசெய்யும் நிதியான 47,272 கோடி ரூபாயை மத்திய அரசு வேறு செலவுகளுக்குப் பயன்படுத்திவிட்டது என தலைமைக் கணக்கு ஆய்வு அலுவலரின் (சி.ஏ.ஜி) அறிக்கை சுட்டிக்காட்டிய பிறகும், தமிழ்நாட்டிற்கு இதுதொடர்பாக இழைக்கப்பட்டுள்ள அநீதியை எதிர்த்துக் குரல் கொடுக்காமல் அடங்கி அமைதி காத்துக் கொண்டிருக்கும் முதலமைச்சர் பழனிசாமிக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நள்ளிரவில் செயல்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி. சட்டத்தால் மாநிலங்களுக்கு ஏற்படும் நிதியிழப்பு குறித்து, பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதிக்கப்பட்டு, “அந்த இழப்பு ஈடுசெய்யப்படும்” என்று மறைந்த நிதியமைச்சர் அருண் ஜெட்லி வாக்குறுதியளித்து, அது 101-வது அரசியல் சட்டத் திருத்தத்திலும், சரக்கு மற்றும் சேவை வரி (மாநிலங்களுக்கு ஈடு செய்தல்) சட்டம் 2017-லும் தெளிவாக உறுதியளிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு அளித்த வாக்குறுதி, ஓர் “இறையாண்மை மிக்க உத்தரவாதம்” (Sovereign guarantee) என்று நம்பியே மாநில அரசுகள் இந்த ஜி.எஸ்.டி. சட்டத்தை, தங்களது சட்டமன்றங்களிலும் நிறைவேற்றிச் செயல்படுத்தின. தமிழகச் சட்டமன்றத்தில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்ட போது, அதில் உள்ள பாதகமான அம்சங்களை எடுத்துச் சொல்லி “ஜி.எஸ்.டி. சட்டத்தை நிறைவேற்ற வேண்டாம். இதைத் தேர்வுக் குழுவிற்கு அனுப்புங்கள்” என்று கோரிக்கை வைத்தேன். ஆனால் அதைக் காதில் போட்டுக் கொள்ளாத அ.தி.மு.க. அரசு, “இழப்பு ஈடு செய்யப்படும் என்று அரசியல் சட்ட உத்தரவாதம் பெற்று இருக்கிறோம்” என்று பெருமை பேசி, பீற்றிக் கொண்டது. அதையொட்டி, தமிழகச் சட்டமன்றத்திலும் ஜி.எஸ்.டி. சட்டத்தை நிறைவேற்றியது.

2017-18-ம் ஆண்டில் வசூல் செய்யப்பட்ட 62,612 கோடி ரூபாயில் 6,466 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு தன்னிடமே வைத்துக் கொண்டது. 2018-19ல் வசூல் செய்த 95,081 ஆயிரம் கோடி ரூபாயில் 40 ஆயிரத்து 806 கோடி ரூபாயை தன்னிடமே வைத்துக் கொண்டது. இந்த இரண்டு ஆண்டுகளில் செய்யப்பட்ட வசூலையும் சேர்த்தால் வரும் ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகையான 47 ஆயிரத்து 272 கோடி ரூபாயை மத்திய அரசே பயன்படுத்திக் கொண்டு விட்டது. மத்திய அரசின் “இந்தியத் தொகுதி நிதியிலிருந்து” மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய இந்தத் தொகையை, “ஜி.எஸ்.டி வருவாய் இழப்பை ஈடுசெய்யும் நிதியத்திற்கு” அனுப்பி, அங்கிருந்து மாநில அரசுகளுக்குப் பிரித்துக் கொடுக்க வேண்டும்.

ஆனால் அதைச் செய்ய மனமின்றி, மாநிலங்களை வஞ்சித்திடும் வகையில் கொடுத்த வாக்குறுதியை மத்திய அரசே அப்பட்டமாக மீறியிருக்கிறது. மத்திய அரசு எடுத்துச் செலவு செய்த “ஜி.எஸ்.டி ஈடு செய்யும் நிதியில்” தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகையும் இருக்கிறது. 2017-18-ம் ஆண்டில் மட்டும் 4321 கோடி ரூபாய் நிலுவைத் தொகை இருக்கிறது.

ஆனால் இந்த சி.ஏ.ஜி அறிக்கை குறித்து இன்றுவரை முதலமைச்சர் பழனிசாமி திருவாய் மலர்ந்து கருத்து ஏதும் கூறவும் இல்லை; மாநில நிதியை எடுத்தது தவறு என்று எதிர்ப்புத் தெரிவித்து, வழக்கம் போல நிதியமைச்சருக்கு ஒரு கடிதம் கூட எழுத முன்வரவில்லை.

“ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்ளச் செல்கிறேன்” என்று அடிக்கடி டெல்லி சென்று வருபவரும், அ.தி.மு.க.வின் “சூப்பர் ஸ்போக்ஸ்மேனும்” ஆன அமைச்சர் ஜெயக்குமாரும் இது குறித்து இதுவரை வாய் திறக்கவில்லை.

தமிழக முதலமைச்சர்கள் வரலாற்றில் நெஞ்சை நிமிர்த்தி, தட்டிக் கேட்க வேண்டிய உரிமைகள் உள்ள காரியங்களில் கூட, அதை ஏனோ தவிர்த்துவிட்டு, “முதுகெலும்பு இல்லாமல் இப்படியும் ஒரு முதலமைச்சர், நெளிந்து வளைந்து கொண்டு இருந்தார்” என்று நாளைய தலைமுறை இழித்துப் பழித்துப் பேசும் அளவிற்கு, பழனிசாமி நடந்து கொள்ளாமல், இப்போதாவது உடனடியாக மத்திய அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழகத்திற்கு வர வேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகையைப் பெற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறேன். இது மத்திய பா.ஜ.க. அரசுக்குச் செய்யும் சலுகை அல்ல. மாநிலத்தின் நலனுக்காக நிலைநாட்ட வேண்டிய உரிமை என தெரிவித்துள்ளார்.