சென்னை:
மிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் சகோதரர் உயிரை மாய்த்துக்கொண்ட செய்தி பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் சகோதரர் தேவராஜ், சென்னை ஓட்டேரியிலுள்ள நாராயணா முதல் தெருவில் அமைந்துள்ள தனது இல்லத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு ஒன்பதரை மணி அளவில் இவர் தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதையறிந்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், அவரது உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தேவராஜ், கடந்த சில நாட்களாக கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அவரது உயிரிழப்பிற்கான முழு காரணம் உடற்கூராய்வு அறிக்கைக்கு பின்னரே தெரியவரும் என்பதால் அது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேவராஜ் தற்கொலை செய்து கொண்ட செய்தி கேட்டு அவரது இல்லத்திற்கு உடனடியாக சென்ற அமைச்சரும் அவரது சகோதரருமான சேகர் பாபு குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அதேபோல் தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தேவராஜ் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.

தேவராஜ் உயிரிழந்த சம்பவம் ஏராளமான திமுக நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்த தேவராஜின் உடல் தற்போது கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இன்று அவரது உடற்கூராய்வு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.