கரூர்:
ரூரில் தளபதி கிச்சன் திட்டத்தில் அழைப்பு விடுப்பவர்கள் அனைவருக்கும் மாவட்டம் முழுவதும் உணவு வழங்கும் திட்டத்தை மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் உணவின்றி தவிக்கக் கூடாது என்பதற்காகவும், சாலை ஓரங்களில் வசிப்பவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயர்த்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயன் முன்புறம் துவக்கி வைத்தார்.

கோவில் பகுதியில் ஆதரவற்ற நிலையில் உள்ள முதியவர்களுக்கு உணவுகளை வழங்கி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத் அலிகான், உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் மத்திய நகர திமுக செயலாளர் கனகராஜ், இளைஞர் அணி அமைப்பாளர் சக்திவேல் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழகத்தில் ஒருவர் கூட பசியால் வாடவில்லை என்ற நிலையை உருவாக்க தளபதி கிச்சன் எனும் பெயரில் செல்போன் மூலம் தொடர்பு கொள்பவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை துவங்கியுள்ளோம்.

நேற்று 3307 பேர் தொடர்பு கொண்டு உணவு கேட்டனர். அவர்களுக்கு இன்று உணவுகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்படுகிறது. இதே போன்று சட்டமன்ற அலுவலகத்தில் 3 வேளை உணவு வழங்கும் திட்டம் நிறுத்தப்படாது என்றார்.