சென்னை:
செந்தில் பாலாஜி கைதுக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை, கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு, அவரது சகோதரர் அசோக் என்பவரது வீடு உள்ளிட்ட 8 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள், நேற்று (ஜூன் 13) காலை 09.00 மணி முதல் மத்திய பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்புடன் அதிரடியாக சோதனை நடத்தி வந்தனர். மேலும், சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் உள்ள அமைச்சரின் அறையிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், இன்று அதிகாலை சோதனை அனைத்தும் முடிவடைந்த நிலையில், சென்னையில் உள்ள இல்லத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள், அவரை விசாரணைக்காக இன்று (ஜூன் 14) காலை 06.00 மணியளவில் காரில் அழைத்துச் சென்றனர்.

அப்போது, அவருக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை ஓமந்தூரார் அரசுப் பன்னோக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அமைச்சர்கள் பொன்முடி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ரகுபதி, சேகர் பாபு, உதயநிதி ஸ்டாலின், ஐ.பெரியசாமி, உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.

இதனிடையே, செந்தில் பாலாஜியின் கைதுக்கு விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைதை மோடி அரசின் பழிவாங்கும் நடவடிக்கையாக தான் பார்க்க வேண்டும். செந்தில் பாலாஜியின் கைது நடவடிக்கை மூலம் எதிர்க்கட்சிகளை அச்சுறுத்த முடியாது. எதிர்க்கட்சியில் இருக்கும் யாரும் வெட்கக்கேடான நடவடிக்கைகளுக்கு அஞ்ச மாட்டோம்” எனத் தெரிவித்துள்ளார்.