மதுரை:

ஜினி வருகையால் தமிழக அரசியலில் எந்தவொரு புதுமையும் நடக்க போவதில்லை என மதுரையில் அமைச்சர் செல்லூர் கே.ராஜு கூறியுள்ளார்.

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் 566 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு கலந்து கொண்டு நலத்திட்டங்களை வழங்கினார்.

பின்னர் விழாவில் பேசுகையில், திமுக ஆட்சியில் முதியோர் ஓய்வூதியம் வாங்குவதில் பல சிக்கல்கள் இருந்தன, அதிமுக ஆட்சியில் முதியோர் ஓய்வூதியம் எளிதில் வழங்கப்பட்டு வருகிறது, தமிழகத்தில் 31 இலட்சம் முதியோர்கள் ஓய்வூதியம் பெறுகிறார்கள், அதிமுக ஆட்சியில் கூடுதலாக 5 இலட்சம் முதியோர்கள் ஓய்வூதியம் பெறுகிறார்கள் என்றார்.

மதுரையில் இன்னும் சில ஆண்டுகளில் ஒவ்வொருவருக்கும் வீட்டு வாசலில் குடிநீர் கிடைக்கும், அதிமுக ஆட்சியில் மதுரை மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளது, புனிதமான வைகையில் கழிவு நீர் கலக்காத வண்ணம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

ரூ.78 கோடி மதிப்பில் வைகையாற்றின் கரையில் புதிய சாலை அமைக்கப்படும், திமுக ஆட்சியில் 2 ஏக்கர் நிலம் கொடுக்கப்படும் என சொன்னார்கள், 2 செண்ட் நிலம் கூட கிடைக்கவில்லை. அதிமுக ஆட்சியில் சொன்னதை செய்கிறோம். சொல்லாததையும் செய்து வருகிறது, மக்களே அதிமுக ஆட்சியின் எஜமானர்கள், மதுரையின் மெரினாவாக வண்டியூர் தெப்பக்குளம் திகழ்கிறது என்று கூறினார்.

விவசாயிகளுக்கு 29 ஆயிரம் கோடி ரூபாய் கடன்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கி உள்ளார். அதிமுக அரசு 10 ஆண்டுகளாக ஆட்சியில் என்ன தவறுகள் செய்தது?, அதிமுக அரசு என்ன தவறுகள் செய்தது என மக்கள் தான் சொல்ல வேண்டும், ஜாதி, மதம் பார்க்காமல் அதிமுக அரசு அனைவருக்கும் நலத்திட்டங்கள் வழங்கி உள்ளோம்” என பேசினார்.

விழாவின் நிறைவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் ” 2010 ஆம் ஆண்டு முதல் தமிழக மக்களுக்கு விடியல் ஏற்பட்டுள்ளது, திமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை சொல்ல தயாரா என சவால் விடுத்தார்.

தமிழகத்தில் எடப்பாடியார் அலை வீசுகிறது, எடப்பாடியார் அலையை பொருத்து கொள்ள முடியாமல் ஸ்டாலின் பேசி வருகிறார். எதிலும் அரசியல் செய்பவர் ஸ்டாலின், திமுக ஆட்சியில் சந்தித்த பிரச்சினைகளை மக்கள் மறக்கவில்லை.

நேற்று வரை அறைக்குள் இருந்த நடிகர்கள் இன்று பொது வெளிக்கு வந்துள்ளனர், நடிகர்களை முதல்வர் வேட்பாளராக மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை, ரஜினி வருகையால் தமிழக அரசியலில் எந்தவொரு புதுமையும் நடக்க போவதில்லை, அதிமுகவில் இருந்து அமைச்சர்கள் உட்பட யாரும் ரஜினியின் கட்சிக்கு செல்ல மாட்டார்கள்” என கூறினார்