சென்னை

மிக்ஜம் புயல் வெள்ளத்தால் சேதமடைந்த வாகனங்களுக்கு விரைவில் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். 

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ‘மிக்ஜம்’ புயலால் பெய்த கனமழையால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. கார், ஆட்டோ, வேன், மோட்டார் சைக்கிள் போன்ற ஆயிரக்கணக்கான வாகனங்கள் வெள்ளத்தில் சிக்கிச் சேதமடைந்துள்ளன. இவற்றில் காப்பீடு செய்யப்பட்ட வாகனங்களுக்கு விரைவில் காப்பீட்டுத் தொகை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

.அதன் அடிப்படையில் தமிழக அரசின் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய காப்பீட்டு நிறுவனங்கள், மோட்டார் வாகன விற்பனையாளர் சங்கக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.

13 முக்கிய காப்பீட்டு நிறுவனங்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் காப்பீடு நிறுவனங்களின் பிரதிநிதிகள், இதுவரை 600 இருசக்கர, 1,275 நான்கு சக்கர மற்றும் 445 வணிக வாகனங்கள் என மொத்தம் 2,320 மோட்டார் வாகனங்களுக்குக் காப்பீட்டுத் தொகைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன என்று தெரிவித்தனர்.

அமைச்சர் தங்கம் தென்னரசு,

”இந்த விண்ணப்பங்கள் மீதும், இனி வரும் நாட்களில் பெறப்படும் காப்பீட்டு விண்ணப்பங்கள் மீது உடனடி தீர்வு காணப்பட வேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட இந்த தருணத்தில், அனைத்து காப்பீட்டு நிறுவனங்களும் மனிதாபிமான அடிப்படையில் பொதுமக்களுக்கு உதவும் விதமாக விரைந்து செயலாற்ற வேண்டும். 

குறுஞ்செய்தி, வாட்ஸ்-அப் மற்றும் இதர சமூக ஊடகங்கள் மூலமாகவும், உதவி மையங்கள்/சிறப்பு முகாம்கள் அமைத்தும் எளிதான முறையில் வாகன காப்பீட்டுதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களைப் பெற்றுத் தீர்வு காண வேண்டும். வெள்ளத்தால் அதிகமாகப் பாதிக்கப்பட்ட இடங்களில் சிறப்பு முகாம்களை நடத்திடவும், பொதுமக்களுக்கு காப்பீடுகளின் மூலம் இழப்பீடுகளைப் பெறுவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். 

இப்பேரிடர் நிவாரண காலத்தில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிட உதவிடும் வகையில் சேதமடைந்த வாகனங்களை நேரில் சென்று விரைந்து ஆய்வு செய்து காப்பீட்டுத் தொகையினை மக்களுக்குத் துரிதமாக வழங்கிட வேண்டும். அனைத்து காப்பீட்டு நிறுவனங்களும் பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் நெறிமுறைகளை இயன்றவரை எளிதாக்கி இழப்பீட்டினை வழங்கிட வேண்டும். 

மோட்டார் வாகன விற்பனையாளர் சங்க கூட்டமைப்பின் கோரிக்கைகளை ஏற்று, வாகனங்களைப் பழுதுபார்ப்பதற்கு காலி இடங்களைக் கண்டறிந்து அரசு தரப்பிலிருந்து தற்காலிகமாக வழங்கப்படும்.”

என்று அறிவித்துள்ளார்.