ஜெயலலிதாவை களங்கப்படுத்தும் வகையில் பதிவு செய்யப்பட்டுள்ள டுவிட்டர் பதிவை உடனடியாக நீக்காவிட்டால் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என திமுகவினருக்கு அமைச்சர் பாண்டியராஜன் எச்சரித்துள்ளார்.

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே, தனியார் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற, நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அமைச்சர் பாண்டியராஜன் பங்கேற்று, சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வு பேரணியையும் தொடங்கி வைத்தார். பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “நீரிழிவு நோய் தாக்கம் 8.9 சதவிகிதமாக உயர்ந்துள்ளது என்றும், நீரிழிவு நோயின் கேபிட்டலாக தமிழகம் உள்ளது என்றும் தெரிவித்தார். ஸ்டாலின் ஜெயிலில் அடிவாங்கி கொண்டிருந்தபோது ஜெயலலிதா அப்போது என்ன செய்து கொண்டிருந்தார், எந்த படத்தில் நடித்து கொண்டிருந்தார் என்று அம்மாவை களங்கப்படுத்தும் வகையில் பதிவு செய்யப்பட்ட டுவீட்டை உடனடியாக நீக்க வேண்டும். இல்லையெனில் அதிமுக தொண்டர்கள் சும்மா விடமாட்டார்கள்.

இவர் என்னவோ தியாகத்தின் முதல் செங்கல்லை எடுத்து வைத்தவர் போன்றும் அந்த சமயத்தில் அம்மா சினிமாவில் நடித்து கொண்டிருந்தார் என்றும் கூறியிருப்பதை சாதாரண தொண்டர்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே உடனே அந்த டுவீட்டை நீக்கவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என எச்சரித்துள்ளார்.