சென்னை: தமிழ்நாட்டில் ஒமிக்ரான் பாதிப்பு, கொரோனா தடுப்பூசி முகாம், புத்தாண்டு கொண்டாட்டங்கள், நடிகர் வடிவேலுவின் கொரோனா பாதிப்பு உள்பட பல்வேறு தகவல்கள் குறித்து மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 415 ஆக அதிகரித்துள்ள நிலையில், 115 பேர் குணமடைந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. தமிழகத்தை பொறுத்தளவில் இதுவரை 34 பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில்  எத்தனைபேர் குணமடைந்துள்ளர் என்பது குறித்து அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

இன்று செய்தியளார்களை சந்தித்த அமைச்சர், மா.சுப்பிரமணியன்,  ஒமிக்ரான் வகை கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் உள்பட 10 மாநிலங்களுக்கு  மத்திய குழு வருவதாக தெரிவித்தவர் தமிழ்நாட்டில் இதுவரை 34 பேர் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 12 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றார்.

மேலும், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில்  அறுவை சிகிச்சை செய்த நோயாளியிடமிருந்து  மருத்துவர்கள், செவிலியர்கள், அவர்களின் தொடர்புகள் உட்பட 39 பேருக்கு  ‘s’ மரபணு குறைபாட்டுடன்  கூடிய கொரோனா ஒமிக்ரான் அறிகுறி உள்ளது. அவர்களின் மாதிரிகள் அடுத்தக்கட்ட பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. 5 நாட்களில் பரிசோதனை முடிவு தெரிய வரும்.

ஒமிக்ரான் பரவல் வேகமாக இருப்பதால், தமிழக மக்கள் புத்தாண்டை மக்கள் வீட்டிலேயே கொண்டாட வேண்டும் என அறிவுறுத்தியதுடன், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகைகளை கொரோனா விதிமுறைகளை பின்பற்றி கொண்டாட வேண்டும்,  நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களை கூட்டமாக கொண்டாடுவதை தவிர்க்க வேண்டும். அதுபோல அண்டை மற்றும் வெளிமாநிலங்களுக்கு சென்று புத்தாண்டு கொண்டாடுவதையும் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.

ஒமிக்ரான தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாளை முதல் வெளிநாடுகளில் இருந்து வரும் அனைவருக்கும் 7 நாட்கள் தனிமை கட்டாயம் என்றும்,  தொற்று அறிகுறி இல்லாதவர்களும்,  வீடுகளில் கட்டாயம் 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். எட்டாவது நாள் கொரோனா இல்லை என்பது பரிசோதனை முடிவில் தெரிய வந்தால் மட்டுமே வெளியில் வர அனுமதிக்கப்படுவார்கள்.

தமிழ்நாடு முழுவதும் நாளை 16 வது கொரோனா தடுப்பூசி மெகா முகாம் 50 ஆயிரம் இடங்களில்  நடைபெறுகிறது. இந்த முகாமில், இரண்டாம் தவணை செலுத்திக்கொள்ளதவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. எனவே, இரண்டாம் தவணை செலுத்திக் கொள்ளாதவர்கள் நாளை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

லண்டனில் இருந்து சென்னை திரும்பிய வடிவேலுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில்  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் போரூர் தனியார்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வடிவேலு நலமாக இருக்கிறார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர் என்றும் கூறினார்.