விழுப்புரம்

ண்ணா  பலகலைக்கழகத்தில் அடுத்து வர உள்ள செமஸ்டர் தேர்வுக்கு மட்டும் வழக்கமான கட்டணம் செலுத்தலாம் என அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

இன்று அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டணம் 50% அதிரடியாக உயர்ந்துள்ளது. அதாவது இளநிலை பொறியியல் படிப்பு தேர்வு கட்டணமாக ஒரு தாளுக்கு ரூ.150 பெறப்பட்டு வந்த நிலையில், தேர்வுக்கட்டணம் 50% உயர்த்தப்பட்டு ரூ.225 ஆக மாற்றம் செய்யப்பட்டு இளநிலை செய்முறை சமர்ப்பிப்பு ரூ.450 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

பொறியியல் இறுதியாண்டு மாணவர்கள் பிராஜெக்ட் செய்ய ரூ.600 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் அந்த கட்டணம் ரூ.900 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஒரு செமஸ்டருக்கு 9 தாள்கள் தேர்வு எழுத வேண்டி உள்ளதால் ரூ.2,050 கட்ட வேண்டிய சூழல் நிலவியுள்ளதாக மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 50% தேர்வுக்கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விழுப்புரத்தில் இன்று செய்தியாளர்களிடம் அமைச்சர் பொன்முடி பேசியபோது

“தமிழகத்தில் பல்கலைக்கழகங்களில் அனைத்து பாடங்களுக்கும் ஒரே மாதிரியாகத் தேர்வு கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என முதலிலேயே முடிவெடுத்தோம். அதன் அடிப்படையில் தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

அனைத்து துணைவேந்தர்களையும் அழைத்துப் பேசி அடுத்த ஆண்டு முதல் ஒரே விதமான கட்டணத்தை வசூலிக்க ஏற்பாடுகள் செய்யப்படும். எதிர்வரும் செமஸ்டருக்கு இந்த கட்டண உயர்வு பொருந்தாது. இந்த செமஸ்டருக்கு வழக்கமாகச் செலுத்தி வந்த தேர்வு கட்டணத்தைச் செலுத்தினால் போதுமானது.”

என்று தெரிவித்துள்ளார்.