சென்னை: மிக்ஜாம்புயல் மழையால் சேதமடைந்த பள்ளிகளின் சீரமைப்பு பணிகளுக்கு 1.90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். பள்ளிகளின் தூய்மைப் பணிக்காக ரூ.1.90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

டிசம்பர் 4ந்தேதி ஆந்திரா அருகே கரையை கடந்த  மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்பட அண்டை மாவட்டங்கள் பலத்த சேதங்களை எதிர்கொண்டன. குறிப்பாக சென்னை வெள்ளத்தில் மிதந்தது. புயல் காற்றால் ஏராளமான மரங்கள் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.  பல வீடுகள் மற்றும் அலுவலகங்களில்  வெள்ள நீர் புகுந்தது. மழைநீரை அகற்றி சீரமைப்பு பணிகள் நடெபற்று வருகின்றன.   சென்னை உள்பட அண்டை  மாவட்டங்களை  புரட்டிப்போட்ட, மிக்ஜாம் புயலால் தமிழ்நாட்டில் 1 கோடியே 20 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவர்களுக்கு தலா ரூ.6ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து, சீரமைப்பு பணிகளுக்கும் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து  தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு டிச.4 முதல் 9-ம் தேதி வரை தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. பள்ளிகள் டிச.11 (இன்று) முதல் மீண்டும் திறக்கப்படும்போது மழை பாதிப்புள்ள பகுதிகளில் இருக்கும் பள்ளி வளாகங்களை சுத்தம் செய்து, பாதுகாப்பான கற்றல் சூழலை உருவாக்கும் விதமாக உரிய பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இந்தப் பணிகளை கண்காணிக்க பள்ளிக்கல்வி துறையைச் சார்ந்த 17 அதிகாரிகள், 4 மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சீரமைப்புப் பணிகளுக்காக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு தலா ரூ.50 லட்சம், காஞ்சிபுரத்துக்கு ரூ.40 லட்சம் என மொத்தம் ரூ.1.9 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, இந்த மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாடநூல்கள் உள்ளிட்ட உடைமைகளை இழந்த மாணவர்களுக்கு, அவை மீண்டும் வழங்கப்பட உள்ளன. அதற்குரிய விவரங்கள் பள்ளிகள் இன்று திறந்தவுடன் கணக்கெடுக்கப்படும். அதைத் தொடர்ந்து தேவையுள்ள மாணவர்களுக்கு பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடை மற்றும் புத்தகப் பை போன்ற பொருட்கள் டிச.12-ம் தேதி முதல் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.