சென்னை: தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனருமான மறைந்த எம்ஜிஆரின் 108வது பிறந்தநாளையொட்டி, சென்னையில் உள்ள  அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது  சிலைக்கு தற்போதைய அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 108வது பிறந்தநாள்  இன்று நாடு முழுவதும் உள்ள அதிமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதிமுக தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி நலத்திட்ட உதவிகள் செய்து தமிழ்நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இந்த  விழாவை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள  அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதைத்தொடர்ந்து, அங்குள்ள கட்சி கொடி கம்பத்தில் கட்சி  கொடியை ஏற்றி வைத்து,  இனிப்புகளை வழங்கினார்.  அதைத்தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,   108 கிலோ எடையுள்ள கேக்கை வெட்டி தொண்டர்களுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் உணவு வழங்கப்பட்டது.

. இந்த நிகழ்வில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தீய சக்தியிடமிருந்து தமிழக மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அவதாரம் எடுத்துவந்த மங்காத புகழ்பெற்ற மாமணி; எத்தனை எத்தனை தலைமுறைகள் தவம் செய்து பெற்றார்களோ என்று வியந்து பார்க்கும் வண்ணம் நமக்குக் கிடைத்திட்ட தெய்வப் பிறவி; ஏழை, எளிய மக்களின் கண்ணீரைத் துடைத்த வள்ளல்,

@AIADMKOfficial நிறுவனத் தலைவர் ‘பொன்மனச் செம்மல்’ புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் 108-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் இத்தருணத்தில், அவர்தம் நெடும்புகழைப் போற்றி வணங்குகிறேன்.

தலைமைக் கழகம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் அமைந்துள்ள நம் உயிர்நிகர் தலைவர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். புரட்சித் தலைவர்; புரட்சித் தலைவியின் பொற்கால ஆட்சியை தமிழ் நாட்டில் மீண்டும் மலரச் செய்யும் மாபெரும் மக்கள் பணியில் நாம் அனைவரும் முழு மனதோடு ஈடுபட இந்நாளில் உளமார உறுதியேற்போம். ஜனநாயகத்தை சீர்குலைக்க, நம் அரசியல் எதிரிகள் எத்தனை திட்டங்கள் தீட்டினாலும், அவை அனைத்தையும் தவிடுபொடியாக்கி, தமிழக மக்களுக்கு நல்லாட்சியை வழங்குகின்ற கடமையும், பொறுப்பும், நம் அனைவர் முன்பும் இருக்கின்றது.

அந்தப் பயணத்தில் கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவருடைய உழைப்பும், ஆர்வமும் மிகவும் இன்றியமையாததாகும். உங்கள் முயற்சிகள் அனைத்திற்கும் என்றென்றும் நான் உறுதுணையாக இருப்பேன். நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து அஇஅதிமுக-வை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வோம்; வெற்றிவாகை சூடுவோம்! #தன்னிகரற்ற_தலைவர்MGR

இவ்வாறு கூறியுள்ளார்.