சென்னை: தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவப்பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தரை நியமிக்க  அரசுக்கு அதிகாரம், சிறைவாசிகள் விடுவிக்க அரசுக்கு அதிகாரம், கூட்டுறவு சட்டத்திருத்தம்   மசோதாக்கள்  துறைசார்ந்த அமைச்சர்களால் பேரவையில் நேற்று (9ந்தேதி) தாக்கல் செய்யப் பட்டது. இந்த மசோதாக்கள் இன்று நிறைவேற்றப்படும்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மே 9மற்றும் 10ந்தேதி ஆகிய இரு நாட்கள்  காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம்  நடை பெற்று வருகிறது. நேற்றைய அமர்வின்போது, அதைத்தொடர்ந்து உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறை கொள்கை விளக்க குறிப்பையும் தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், செந்தில்பாலாஜி, ஐ.பெரியசாமி ஆகியோர் புதிய திருத்த சட்ட மசோதாக்களை தாக்கல் செய்தனர்.

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களக்கு  துணைவேந்தரை நியமிக்க  அரசுக்கு அதிகாரம் வழங்கி  பல்கலைக்கழக சட்டங்களில் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, ஏற்கனவே சென்னைப் பல்கலைக்கழகம் உட்பட 13 பல்கலைக்கழகங்களின் சட்டங்களில் திருத்தம் செய்யப்பட்டு, சட்டப்பேரவையில் உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடியால் சட்ட முன்வடிவு அறிமுகம் செய்யப்பட்டது.  தொடர்ந்து, அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை, தமிழக அரசுக்கும் வழங்கும் சட்டத்திருத்த முன்வடிவை சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, அறிமுகம் செய்தார்.

இந்நிலையில் சட்டப் பேரவையில் நேற்று தமிழ்நாடு டாக்டர்எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை நியமிக்க, தமிழக அரசுக்கு அதிகாரம் அளிக்கும் சட்டத்திருத்த முன்வடிவை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிமுகம் செய்தார். அதற்கான நோக்க காரண விளக்க உரையில், குஜராத், தெலங்கானா, கர்நாடக மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனத்தில் அரசின் அதிகாரம் குறித்தும், அதன் அடிப்படையில் தமிழக அரசுக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, கூட்டுறவு சங்கங்களின் முறையான ஆளுகையை உறுதி செய்யவும், அதன் மூலம் பொதுநலனைப் பாதுகாக்கவும், முறையான கட்டுப்பாடு, கண்காணிப்புக்கான சட்டத்திருத்த முன்வடிவு அறிமுகம் செய்யப்பட்டது. கூட்டுறவு சங்கத்தில் கையாடல், மோசடியாக பணத்தை தக்க வைத்தல் போன்றவற்றுக்கு, பதவிக்காலம் முடிந்த பின் பெறப்படும் புகார்களின் அடிப்படையில், சங்கத்தின் நிர்வாகம் அல்லது பணியாளர்களுக்கு உடந்தையாக உள்ள வெளியாட்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான சட்ட முன்வடிவும் சட்டப்பேரவையில் அமைச்சர் ஐ.பெரியசாமியால் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த சட்டத்திருத்த மசோதாக்களை அறிமுக நிலையிலேயே எதிர்ப்பதாக அதிமுக சார்பில், செல்லூர் ராஜு சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து சிறைவாசிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதில், கள்ளச்சாராயக் காரர்கள், கணினிவெளி சட்டக்குற்றவாளிகள், மருந்து சரக்கு குற்றவாளிகள், வனக் குற்றவாளிகள், குண்டர்கள், விபசாரத் தொழில் குற்றவாளிகள், மணல் கடத்தல் குற்றவாளிகள், பாலியல் குற்றவாளிகள், குடிசைப்பகுதி நில அபகரிப்பாளர்கள் ஆகியோரின் அபாயகரமான நடவடிக்கையை தடுத்தல் சட்டத்தின் 15-வது பிரிவு, மாநில அரசு எந்த நேரத்திலும், தடுப்புக் காவலில் உள்ள எவரையும் குறிப்பிட்ட காலத்துக்கு நிபந்னையின்றி அல்லது அந்த நபர் ஏற்கும் நிபந்தனையின் பேரில் விடுவிக்கவும், விடுவிப்பை ரத்து செய்யவும் வழிவகை செய்கிறது.

தற்போது, அந்த சிறைவாசிகள் ரத்த சொந்தங்களின் திருமணத்தில் பங்கேற்க, உடல் நலமின்மைக்கு சிகிச்சை பெற, நெருங்கிய உறவுகளின் இறப்பில் பங்கேற்க மாநில அரசுக்கு பல்வேறு முறையீடுகள் வந்துள்ளன. ஆனால், நிர்வாக நடைமுறைகாரணமாக அந்த முறையீடுகளுக்கு உரிய நேரத்தில் தீர்வு காணமுடியவில்லை. இதைத் தவிர்க்கும் வகையில், மாவட்ட அளவிலான அதிகார அமைப்புக்கு, தற்காலிக விடுவிப்புக்கு அனுமதி வழங்கும் அதிகாரம் அளிக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. அதன் அடிப்படையிலான சட்ட முன்வடிவை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி அறிமுகம் செய்தார்.