சேலம்: காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், மேட்டூர் அணை நீர்மட்டம் 42வது முறையாக  இன்று முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதையடுத்து அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு உள்ளது.

காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, அங்குள்ள கபினி, கிருஷ்ணசாகர் அணைகள் நிரம்பி வழிகிறது. இதனால், உபரி நீர் காவிரியில் திறந்துவிடப்பட்டு உள்ளது. அதனால் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.  தொடர் நீர்வரத்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.

கடந்த 4 நாட்களில் அணை நீர்மட்டம் 20 அடி வரை உயர்ந்தது. நேற்று 114 அடியாக இருந்த நிலையில், இன்று 120அடியை எட்டியுள்ளது.  மேட்டூர் அணை வரலாற்றில் 42-வது முறையாக இன்று மீண்டும்  முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 

இதையடுத்து அணையில் இருந்து உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது.  முதல் கட்டமாக 16 கண் மதகு வழியாக 25,000 கன அடியும், நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 25,000 கன அடியும் திறக்கப்படுகிறது.  கடந்த 8 மாதங்களில் 2 வது முறையாக 16 கண் மதகுகள் வழியே உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. நீர் திறப்பால் விவசாயிகள், பொதுமக்கள் என அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.