சென்னை: ராஜீவ்காந்தி மருத்துவமனையில் குரங்கம்மைக்கு 10 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு தயார் நிலையில் இருப்பதாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

கேரளாவில் குரங்கம்மை நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டிலும் தீவிர கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. விமான நிலையங்களில் வெளி நாட்டில் இருந்து வருபவர்களுக்கு குரங்கம்மை பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இது தொடர்பான இன்று சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் குரங்கம்மை பாதிப்பு பரிசோதனை குறித்து  ஆய்வு செய்த  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூறியதாவது,

இந்தியாவில் முதன்முறையாக கேரளாவில் குரங்கம்மை கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை குரங்கம்மை பரவல் ஏதும் இல்லை. இருந்தாலும், குரங்கம்மை பாதிப்பு பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 10 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு தயார் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசியவர், குரங்கம்மைக்கு சென்னையில் ஆய்வகம் அமைக்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறியவர்,  தமிழகத்தில் இதுவரை யாருக்கும் குரங்கம்மைக்கான அறிகுறி இல்லை எனவும், தமிழகம் பாதுகாப்பாகவே இருப்பதாகவும் குறிப்பிட்டார்.  மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலமுடன் இருப்பதாக தெரிவித்த அவர், மருத்துவர்களின் அறிவுறுத்தல்படி, ஓய்வில் இருக்கிறார் எனவும்  கூறினார்.