சென்னை:

ண்ணாரப்பேட்டை-திருவொற்றியூர் விம்கோ நகர் இடையே,  மெட்ரோ ரெயில் பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளது. இதையடுத்து,  அடுத்த மாதம் சோதனை ஓட்டம் நடைபெறும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மெட்ரோ ரயில்சேவை 2 வழித்தடங்களில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முதல் கட்டமாக வண்ணாரப்பேட்டை- விமான நிலையம் வரையிலான  45 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்பட்ட மெட்ரோ ரெயில் வழித்தடத்தில் பயணிகள் சேவை நடந்து வருகிறது.

இந்த ரயில் சேவையை மேலும் 9 கிலோ மீட்டர் தூரம் அதிகரித்து, திருவொற்றியூர் விம்கோ நகர் வரை  பாதை நீட்டிப்பு பணிகள் நடைபெற்று வந்தது. இந்த வழித்தடத்தில் தியாகராயா கல்லூரி, கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை, டோல்கேட், தாங்கல், கவுரி ஆஷ்ரம், திருவொற்றியூர், விம்கோ நகர் உள்பட 8 மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு வந்தன.

இதற்கான பணிகள் முடிவடைந்து  தண்டவாளம் சிக்னல்கள் அமைக்கும்பணி நடைபெற்று வந்தது. இந்த பணிகள்  இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் வண்ணாரப்பேட்டை – திருவொற்றியூர் விம்கோ நகர் வரையிலான வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் அடுத்த மாதம் நடைபெறும் என்றும், வரும் ஜூன் மாதம் முதல் விம்கோ நகர் வரை மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் என்று என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.