சென்னை:
சென்னை மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணி காரணமாக இன்று அண்ணா சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டு ஒரு பேருந்தும், காரும் சிக்கின.

சம்பவ இடத்துக்கு வந்த அமைச்சர் ஜெயக்குமார், “டில்லியில் மெட்ரோ ரயில் சுரங்கப்பணி நடந்தபோது இது போன்ற சம்பவங்கல் நிறைய நடந்த. ஆனால் சென்னையில் இதுதான் முதன் முறை” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஆனால் இதே அண்ணா சாலையில் கடந்த மார்ச் 30ம் தேதி பள்ளம் ஏற்படது. இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது அதை ஜெயக்குமார் கவனிக்காததுபோல் இருந்துவிட்டார். மேலும் கடந்த 2016ம் ஆண்டு ஈகா தியேட்டர் அருகில் தீடீர் பள்ளம் ஏற்பட்டு பிறகு சரி செய்யப்பட்டது.

2015ம் ஆண்டு ஜிஎன் செட்டி தெருவில் திடீர் பள்ளம் ஏற்பட்டு அதில் தண்ணீர் லாரி சிக்கியது. அதே 2015ம் ஆண்டு ஆழ்வார் திரநகர் பகுதியிலும், திடீர் பள்ளம் ஏற்பட்டது.
2014 ம் ஆண்டு எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட் அருகிலும், நங்கநல்லூர் பகுதியிலும் திடீர் பள்ளம் ஏற்பட்டது. அமைந்தகரை பகுதியிலும் இதுபோல் பள்ளம் ஏற்பட்டது.

ஆனால் அமைச்சர் ஜெயக்குமாரோ இதுதான் முதன் முறை என்கிறார்.
புவியியல் நிபுணர்கள், “முறையாக மண் பரிசோதனை செய்தே சுரங்கப்பாதை பணிகளைத் துவங்க வேண்டும். மண் நெகிழ்வுத்தன்மையுடன் இருந்தால் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படும்” என்கின்றனர்.

இது குறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேட்டபோது, “முறையான மண் பரிசோதனைகளுக்குப் பிறகே மெட்ரோ திட்டம் துவங்கப்பட்டது” என்றார்.