சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆவினில், 50பணியாளர்களுக்கு கருணை வேலை, ஆவின் ஆய்வக கட்டிடம், 16 துணை மின்நிலையங்கள் உள்பட பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.

மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்கள் மற்றும் சென்னையில் உள்ள தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான 50 பணியாளர்களின் வாரிசுதார்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, 10 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

அதையடுத்து, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் (ஆவின்) சார்பில் சென்னை, மாதவரம் பால் பண்ணை வளாகத்தில் ரூ. 8 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ஆவின் மாநில மைய ஆய்வகக் கட்டடத்தை  தலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் ரூ.161.38 கோடியில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 16 புதிய துணை மின் நிலையங்களை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  திறந்து வைத்தார். மேலும், 51 துணை மின் நிலையங்களில் 602 எம்.வி.ஏ அளவிற்கு திறன் உயர்த்தி ரூ. 97.56 கோடி மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள 52 எண்ணிக்கையிலான மின் மாற்றிகளின் செயல்பாட்டினையும் தொடங்கி வைத்தார்.