மதுரை: தமிழகத்தில் குரங்கு அம்மை நோய் பரவல் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக செயல்படுத்தப்பட்டு இருப்பதாக தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள  குரங்குஅம்மை நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழக  சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது,  முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி தமிழகத்தில் குரங்கு அம்மை நோய் பரவல் தடுப்பு குறித்து தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. தமிழகத்தில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களைத் தொடர்ந்து கண்காணிப்பதும், கேரள, ஆந்திர எல்லைகளிலிருந்து வருபவர்களுக்கு, குரங்கம்மை பாதிப்பு ஏதாவது உள்ளதா என்பதை கண்டறியவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக திருச்சி, சென்னை, கோவை, மதுரை ஆகிய பன்னாட்டு விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பில் அரசு அதிகாரிகள், மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களுக்கு குரங்குஅம்மை நோய் அறிகுறிகளான கொப்புளங்கள் இருக்கிறதா? என கண்காணிக்கப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் ஐ.சி.எம்.ஆர். விதிப்படி வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை “மாஸ் பீவர்ஸ் ஸ்கிரீனிங் கேம்ப்” அடிப்படையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.  வெளிநாடுகளில் இருந்து தினமும் வரும் 300 முதல் 400 பயணகளுக்கு ரேண்டம் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

மாநில எல்லைகளில் இருந்து வருபவர்களுக்கு எச்சரிக்கையாக பரிசோதனை செய்வது கண்காணிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாவட்ட நிர்வாகங்கள், உள்ளாட்சி அமைப்புகள், தொடர்ந்து மக்கள் நல்வாழ்வுத்துறையோடு இணைந்து, டெங்கு, மலேரியா போன்ற நோய்களில் இருந்து மக்களைக் காப்பதற்கு உண்டான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.