திருப்பாவை – பாடல் 7  விளக்கம்

மார்கழி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும்.  இந்த மாதத்தில் ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே ‘திருப்பாவை’ என்று அழைக்கப்படுகிறது. இந்த பாடல்கள் ஆண்டாள் பாசுரம் என்றும் வழங்கப்படும். இந்த திருப்பாவை பாடல்கள் அனைவராலும் மார்கழி மாதத்தில் தினமும் பாடப்படும் முக்கிய பாடல்களாகும். அதிலும் திருமணம் ஆகாத பெண்கள் மார்கழியில் திருப்பாவை பாடுவது என்பது மிகவும் விசேஷம். அது அவர்களுக்கு நல்ல கணவனை பெற்றுத் தரும்.

அந்தவகையில், மார்கழி மாதத்தின் 7 ஆம் நாள் பாடவேண்டிய திருப்பாவை பாடல் 7.

திருப்பாவை பாடல் 7

கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்

ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
தேசம் உடையாய்! திறவேலோர் எம்பாவாய்.

 

பொருள்:

ஆறாம் பாசுரத்தில் இயற்கையின் விழிப்பை சொல்லி, கண்ணுறக்கம் கலைந்து எழுமாறு தோழியைத் துயில் எழுப்பிய ஆண்டாள், அவள் எழுந்திருக்காதது கண்டு மேலும் சில நிமித்தங்களை சொல்லி துயில் கலைந்து எழுமாறு வேண்டுகிறார் இந்த ஏழாம் பாசுரத்தில். பரத்வாஜ பறவிகள் ஒன்றோடு ஒன்று பேசியும் குலவியும் கீச்சு கீச்சு என்று எங்கும் ஆரவாரம் செய்கின்றன். இந்த ஆரவாரத்தை இன்னும் நீ கேட்கவில்லையோ.. ஏ மதியற்ற பெண்ணே நறுமணம் கமலும் பரிமள பொருள்களினால் அணிசெய்த கூந்தலை உடையவர்கள் இந்த இடைப் பெண்கள்.

அவர்களின் கழுத்தில் அணிந்துள்ள அச்சுத்தாலியும், ஆமைத்தாலியும் ஒன்றோடு  ஒன்று உரசி கலகலவென்று ஒலி எழுப்புகின்றன. அவர்கள் தங்கள் கைகளில் மத்தினை எடுத்து அசைத்து அசைத்து தயிர் கடைகிறார்கள். அவ்வாறு கடையும் தயிரின் ஒலியை நீ கேட்கவில்லையோ? நாங்கள் நாராயணான கேசவனைப் புகழ்ந்து பாடுவது உன் காதில் கேட்டும் உறங்கும் மர்மமென்ன? பிரகாசமான முகத்தைக் கொண்டவளே! உன் வீட்டுக்கதவைத் திற என்று தோழியை துயில் எழுப்புகிறாள் ஆண்டாள்.