சென்னை: முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படுவது குறித்தும், அதுதொடர்பான வழக்கில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் நடவடிக்கை குறித்தும் கடுமையாக விமர்சனம் செய்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்,  நீதித்துறையை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும் என கூறினார்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின், நீதி குறித்த விமர்சனம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. ஆட்சியாளர்களின் அச்சுறுத்தல் காரணமாக, நீதி வளைக்கப்படுகிறதா என கேள்வி எழுந்துள்ளது.  சமீப காலமாக  கீழமை நீதிமன்றங்களால் அமைச்சர்கள்மீதான வழக்குகள் ரத்து செய்யப்படுவது தொடர்ந்து வந்த நிலையில், இதுபோன்ற வழக்குகளில்,  ஆட்சியாளர்களுக்கு தகுந்தவாறு, பச்சோந்திகளாக மாறி லஞ்சஒழிப்பு காவல்துறையினர் நடந்து கொள்வதும் கடுமைvயான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில், நீதிபதியை மிரட்டும் போக்கில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியிருந்ததும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஓப்பனாக தனது கருத்தினை வெளியிட்டு உள்ளார்.

2008-ம் ஆண்டு மறைந்த கருணாநிதி முதல்வராக இருந்தபோது  நடைபெற்ற திமுக ஆட்சியில்,  தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்டை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசன் என்பவருக்கு, ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக ஐ.பெரியசாமி உள்பட பலர்மீது 2012-ம் ஆண்டு, அ.தி.மு.க ஆட்சியின்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர்.  இந்த வழக்கிலிருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை கடந்த மார்ச் மாதம்  விடுவித்து சென்னை எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னதாக, கடந்த அதிமுக ஆட்சியில்,  2001-2006-ம் ஆண்டுகளில்  சமூக நலத்துறை அமைச்சராக இருந்த வளர்மதி, அவரின் குடும்பத்தினருக்கு எதிராகவும் சொத்துக்குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கிலிருந்து வளர்மதி உள்ளிட்டோரை விடுவித்து ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம், 2012-ம் ஆண்டு உத்தரவிட்டது.

இந்த இரு உத்தரவுகளை மறுஆய்வு செய்யும் வகையில் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்திருக்கிறார், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். ஏற்கனவே அமைச்சர்கள் பொன்முடி, கேகேஎஸ்எஸ்ஆர், தங்கம் தென்னரசு மற்றும் முன்னாள் முதல்வர் ஒபிஎஸ் ஆகியோர் வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டதையும் மீண்டும் விசாரணைக்கு எடுத்துள்ளார். நீதிபதியின் இந்த நடவடிக்கை அரசியல் கட்சியினரிடையே அதிர்ச்சியை எற்படுத்தி உள்ளது.

இந்த  நிலையில், முன்னாள் அமைச்சர் வளர்மதி, மற்றும் இந்நாள் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆகியோர் மீதான இரு வழக்குகளும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்  விசாரணைக்கு வந்தன. அப்போது, லஞ்ச ஒழிப்புத்துறையின் நடைமுறை மோசமாக இருக்கிறது எனவும், ஒவ்வொரு வழக்கிலும் இதே நடைமுறைகள் பின்பற்றப்படுவது அதிர்ச்சியளிக்கும் வகையில் இருப்பதாகவும் விமர்சனம் செய்த தெரிவித்த நீதிபதி,

`முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு எதிரான வழக்கில், 100-க்கும் மேற்பட்ட சாட்சிகளை விசாரித்து ஏராளமான ஆவணங்களை ஆய்வுசெய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நிலையில், குற்றம்சாட்டப்பட்டவர் மேல்விசாரணை கோரி தாக்கல் செய்த மனு அடிப்படையில் விசாரணை நடத்திய அதே புலன் விசாரணை அதிகாரி வழக்கை முடித்துவைக்க கூறியிருக்கிறார்” எனத் தெரிவித்தார்.

“அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கைப் பொறுத்தவரை விடுவிக்கக் கோரிய மனுவும், வழக்கை ரத்துசெய்யக் கோரிய மனுவும் உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. இருப்பினும், வழக்கு தொடர அனுமதி வழங்கிய விவகாரத்தின் அடிப்படையில், சிறப்பு நீதிமன்றம் அவரை விடுவித்திருக்கிறது” எனக் குறிப்பிட்டார்.

மேலும், இந்த வழக்குகளை எதிர்கொள்ள யாரும் விரும்பவில்லை எனக் கூறிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இந்த வழக்குகளில்,  ‘‘கடந்த சில ஆண்டுகளாக லஞ்ச ஒழிப்புத்துறையின் நடைமுறை படுமோசமாக உள்ளது. முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு எதிரான இந்த வழக்கில் 100-க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரித்து ஆதாரங்களை திரட்டியுள்ள லஞ்ச ஒழிப்புத்துறை, திடீரென ஆதாரம் இல்லை எனக்கூறி வழக்கை முடித்து வைக்க கோருகிறது. அதன்படி அவரை விடுவித்து கீழமை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் மேல்விசாரணை கோரி தாக்கல் செய்த மனு அடிப்படையில் விசாரணை நடத்திய அதே புலன் விசாரணை அதிகாரி வழக்கை முடித்து வைக்க வேண்டும். ஆதாரம் எதுவும் இல்லை என்று கூறி அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

விடுதலையான, விடுவிக்கப்பட்ட இதுபோன்ற  வழக்குகளின் மறுஆய்வு மனுவை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்வதால் தன்னை  அரசியல்வாதிகள் வில்லனாக பார்க்கின்றனர். ஆனால், தனிப்பட்ட காரணங்களுக்காக நான் இந்த வழக்குகளை விசாரணைக்கு எடுக்கவில்லை என்றவர்,  கிரிமினல் வழக்குகளை எதிர்கொள்ள யாரும் விரும்பவில்லை. அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கை பொறுத்தவரை விடுவிக்க கோரிய மனுவும், வழக்கை ரத்து செய்யக்கோரிய மனுவும் ஐகோர்ட்டினால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், வழக்கு தொடர அனுமதி வழங்கிய விவகாரத்தின் அடிப்படையில் சிறப்பு கோர்ட்டு அவரை விடுவித்து இருக்கிறது.

கீழமை நீதிமன்றங்களின் செயல்பாடுகளை எல்லாம் பார்க்கும்போது உண்மையில் நீதித்துறையை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும் என கூறினார்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் இந்த கருத்து நீதித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.