மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீன பட்டினப் பிரவேசம் வைகாசி திருவிழா இன்று  கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆதினத்தை பல்லக்கில் தூக்கிச் செல்லும் நிகழ்ச்சி வரும் 22ந்தேதி நடைபெற உள்ளது.

பல ஆயிரம் ஆண்டுகளாக பாரம்பரியாகமாக நடைபெற்று வரும் பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்கு இந்த ஆண்டு திமுகஅரசு தடை போட்டது. ஆனால், இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததுடன், திமுகஅரசின் நடவடிக்கை கடுமையான விமர்சனங்களை எழுப்பியது. இதைத்தொடர்ந்து, தடை வாபஸ் பெறப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த தருமபுரத்தில் தருமபுர ஆதினம் செயல்பட்டு வருகிறது. இங்கு 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஞானாம்பிகை உடனுறை ஸ்ரீ ஞானபுரீஸ்வரர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு பத்து நாட்கள் நடைபெறும் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு இன்று காலை கொடியேற்றம் நடைபெற்றது. சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து ஜபம் மற்றும் சிறப்பு யாகம் நடைபெற்றது சுவாமி அம்பாள் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள் கொடிமரத்திற்கு எழுந்தருளினார். அதனை அடுத்து வேத மந்திரங்கள் முழங்க, மங்கல வாத்தியங்கள் இசைக்க தருமபுரம் ஆதீனம் 26ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் கோயில் கொடி மரத்தில் ரிஷபக் கொடி ஏற்றப்பட்டது.

ஆதீன மடத்தில் தருமபுர ஆதீன குருமுதல்வர் ஸ்ரீ ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் குருபூஜை பெருவிழா 10 நாள் உற்சவமாக நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு திருநெறிய தெய்வத்தமிழ் மாநாடு உள்பட  பல்வேறு தமிழ் சைவம் சார்ந்த கருத்தரங்குகள் நடைபெறுகின்றன.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 18ஆம் தேதி சுவாமி அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சியும்,

20ம் தேதி பஞ்சமூர்த்திகள் திருத்தேர் உற்சவமும்,

21ஆம் தேதி காவிரியில் தீர்த்தவாரி நடைபெறுகிறது.

விழா நிறைவாக 11ம் நாள் திருவிழாவாக 22 ஆம் தேதி ஆதீன 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பல்லக்கில் வீதி உலா வரும் பட்டினப்பிரவேசம் காட்சியும் நடைபெறுகிறது.